அண்ணனுக்கு ஷாக் கொடுத்த பிரபு.. சொத்தில் ஒரு பங்கு கூட கிடையாது?.. நீதிமன்றம் போட்ட ஆர்டர்
சென்னை: ரூ.3 கோடி கடனுக்காக 9 கோடி கட்ட முடியாத நிலையில், நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், இதனை எதிர்த்து சிவாஜியின் மகன் பிரபு மனுதாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. இதனால், சிவாஜி குடும்பத்திற்குள் மிகப்பெரிய பூகம்பமே வெடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் ஈசன் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிறுவனம் விஷ்னு விஷால், நிவேதா பெத்துராஜ் நடித்த ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். இந்நிலையில், ஜகஜால கில்லாடி படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் ரூ.3.75 கோடி கடனாக பெற்றுள்ளனர். இந்த கடனை வருடத்திற்கு 30% வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால், இதுவரை வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் என்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்தாண்டு மே மாதம் உத்தரவிட்டார்.
அன்னை இல்லம் ஜப்தி: மேலும், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான வழக்கு கடந்த 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அன்னை இல்லம் வீட்டிற்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது என் பெயரில் உள்ள சொத்து என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அண்ணனுக்கு உதவ முடியாது: அப்போது நீதிமன்றத்தில் உரையாடிய பிரபு, எனது அண்ணன் ராம்குமார் வாங்கிய கடனை என்னால் அடைக்க முடியாது. அவர் இதுபோன்று பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். நான் இதுவரை யாரிடமும் கடன் பெறவில்லை. ரூ.150 கோடி சொத்து மதிப்புள்ள அன்னை இல்லத்தை 9 கோடி கடனுக்கான ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் பிரபு உதவ முடியாது என்றூ கூறியிருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. ராம்குமார் அதிக கடனை வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானதால் சிவாஜி குடும்பத்திற்குள் இன்னும் என்ன மர்மம் அடங்கி இருக்கிறதோ என கிசுகிசுக்கப்பட்டன.

ராம்குமாருக்கு நீதிமன்றம் செக்: இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவாஜி வீட்டின் மீது உரிமை, பங்கு இல்லை எனவும், எதிர்காலத்திலும் எந்த உரிமையும் கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜப்தி உத்தரவை நீக்க கோரிய நடிகர் பிரபு மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











