நெபோடிசம் குறித்து கிச்சா சுதீப் கருத்து.. பதிலடி கொடுத்த சிவராஜ்குமார்.. கர்நாடக சினிமா உலகில் பரபரப்பு
பெங்களூரு: கன்னட திரையுலகின் டாப் ஸ்டாரான கிச்சா சுதீப்பின் மருமகன் சஞ்சித் சஞ்சீவ், 'மேங்கோ பச்சா' (Mango Pacha) என்ற படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார். தன் வீட்டுப் பிள்ளை என்பதால், சுதீப்பும் சளைக்காமல் இந்த படத்தின் விளம்பரப் பணிகளில் படு சுறுசுறுப்பாக இறங்கி வேலை பார்த்து வந்தார். ஆனால் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? "இங்கேயும் வாரிசு அரசியலா?" என்று கேள்விகளை எழுப்பி சோஷியல் மீடியாவில் பஞ்சாயத்தைக் கூட்டினர்.
விஷயம் பெரிதாக மாறுவதை உணர்ந்த சுதீப், உடனே மேடை ஏறி அதிரடி விளக்கம் ஒன்றை அளித்தார். "டாக்டர் ராஜ்குமாரின் பிள்ளைகள் எல்லாரும் சினிமாவுக்கு வந்தாங்களே, அவங்களை ஏன் யாரும் கேள்வி கேட்கலை?" என்று வெடித்த சுதீப், திரையுலகில் வாரிசாக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும், தகுதி உள்ள எவர் வேண்டுமானாலும் நடிக்க வரலாம் என்று காரசாரமாகப் பேச, இந்த கமெண்ட் இணையத்தில் தீயாய் பரவியது.
என்ட்ரி கொடுத்த சிவராஜ்குமார்.. வாரிசு விவாதத்திற்கு முற்றுப்புள்ளி: சுதீப்பின் இந்த 'ராஜ்குமார் குடும்ப' கமெண்ட்டுக்கு, டாக்டர் ராஜ்குமாரின் மூத்த மகனும், கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான சிவராஜ் குமார் செம்ம மாஸாக பதில் அளித்துள்ளார்.

வாரிசு அரசியலை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய சிவராஜ்குமார், "இங்கே கனவு காண்பதற்கு எல்லாருக்குமே முழு உரிமை இருக்குப்பா. தங்களோட திறமையை நிரூபிக்க எல்லாருக்குமே ஒரு வாய்ப்பு தேவை. இதை வெறும் வாரிசு அரசியலா மட்டும் பார்க்கக் கூடாது. தனிநபர் திறமைக்குத்தான் நாம முன்னுரிமை கொடுக்கணும்" என்று பக்குவமாகப் பேசியுள்ளார்.
புதுசா வர்றவங்களை தியேட்டர்ல போய் பாருங்க: மேலும் திரைத்துறையின் வளர்ச்சி குறித்துப் பேசிய ஷிவராஜ் குமார், "சினிமாவுக்குப் புதுப்புது திறமையாளர்கள் அதிகமாக வர வேண்டும். நம்ம மொழி வளரணும்னா, புதுமுகங்களோட படங்களை மக்கள் தியேட்டருக்குப் போய் பார்க்கணும். ஒரு புதிய நடிகர் உள்ளே வந்தா, அவரை மட்டும் நம்பி இல்லை, ஒரு இயக்குநரில் இருந்து கேமராமேன் வரை பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனால புதிய படங்களை ஆதரிப்பது ரொம்பவே அவசியம்" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சஞ்சித்துக்கு திறமை இருக்கா?: ஏற்கனவே சுதீப் இந்த விவகாரத்தில், "என் குடும்பத்துல இருக்குற எல்லாரும் ஒன்னும் சினிமாவுக்கு வரலை. சஞ்சித்திற்கு நடிப்பின் மீது அக்மார்க் ஆர்வம் இருந்தது, அதனாலதான் அவனுக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. திறமை இருந்தா யார் வேணாலும் சினிமாவுக்குள் நுழையலாம், ஜெயிக்கலாம்" என்று முடித்து வைத்தார். சுதீப் கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பேசினாலும், பெரிய மனுஷ தோரணையில் சிவராஜ்குமார் அதற்கு கூலாகவும் நச்சுனுக்கும் கொடுத்த பதில் தான் இப்போது டோலிவுட் தாண்டி கோலிவுட் வரை செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications