நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரையில்.. கொஞ்சம்.. கொஞ்சும் தமிழுக்கும் வாங்க ஷோபனா !
சென்னை : நீண்ட நாட்களுக்கு பிறகு ஷோபனா 'வரனே அவஷ்யமுன்ட்' என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனுப் சத்யன் இயக்கி இருக்கும் படம் 'வரனே அவஷ்யமுன்ட்' இது இவருக்கு முதல் திரைப்படம். இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்துள்ளார். அவருடன் சுரேஷ் கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷினி மற்றும் ஊர்வசி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அல்போன்ஸ் ஜோசப் இசை அமைத்துள்ளார். முகேஷ் முரளிதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி நடித்து இருக்கும் கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா முதலில் நடிக்க இருந்ததாக கூறப்பட்டது. சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை.

இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷோபனா நடித்துள்ளார். பல வருடங்களாக வெள்ளித்திரையை விட்டு ஒதுங்கி இருந்த இவர் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படத்தில் இவரின் நடிப்பு பற்றி அதிகம் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இதில் இவர் நடிகர் சுரேஷ் கோபி உடன் இணைந்து நடித்துள்ளார்.

டீசரை பார்த்த தமிழ் ரசிகர்கள் தளபதி படத்தில் பார்த்த ஷோபனாவை நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் பார்க்கிறோம். நீங்கள் தமிழில் நடித்து பல வருடங்கள் ஆகி விட்டது மீண்டும் தமிழ் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











