3 படப்பிடிப்பில் இவ்வளவு நடந்துச்சா? இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ருதி ஹாசன் சொல்ல என்ன காரணம்?
சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் இந்திய அளவில் அறியப்பட்ட திரைப்பிரபலம். கமல்ஹாசனின் மகள் என்றாலும், அதைக் கொண்டு யாரிடத்திலும் சிபாரிசுக்கு செல்லாதவராக இருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது ரஜினிகாந்த் உடன் இணைந்து கூலி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய முதல் படமான 3 படத்தில் பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
கூலி படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம். ரஜினி மட்டும் இல்லாமல் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஆமிர் கான் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும், நடிகை பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு இசை அமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இதில் ரஜினிகாந்த்தின் மகளாக தான் நடித்துள்ளதாக ஏற்கனவே ஸ்ருதி ஹாசன் தெரிவித்திருந்தார். இப்படி இருக்கும்போது, இவர் அண்மையில் அளித்த பேட்டியில் 3 படத்தில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, " 3 படத்தில் நடித்த போது எனக்குள் மிகவும் பயம் இருந்து கொண்டே இருந்தது. காரணம் படத்தின் மையக் கதாபாத்திரமாக நான் இருக்கிறேன். ஜனனி கதாபாத்திரத்தை வைத்து தான் கதை சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் எனக்குள் இருந்த பயத்தைப் போக்க தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: நான் எப்போது நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறேனோ, அப்போது எல்லாம் சிறப்பாகவே செயல்படுவேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது 3 படத்தில் நடிக்கும்போது கூடுதலாகவே சிறப்பாக பணியாற்ற காரணமாக அமைந்தது. 3 படம் இப்போது வெளியானால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான ஒய் திஸ் கொலவெறி பாடல் முன்பு எப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோ, இப்போது அதை விட கூடுதலாக மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும். படம் அப்போதே வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படம். ஆனால், ஏனோ தெரியவில்லை" என்று பேசியுள்ளார்.
என்ன காரணம்?: 3 படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததற்கு காரணமாக சொல்லப்பட்டது நடிகர் தனுஷ் படத்தில் தற்கொலை செய்து கொள்வது போன்ற திரைக்கதைதான். இந்த படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அனிருத் தற்போது இந்திய அளவில் மிகவும் முக்கியமான இசையமைப்பாளராக வளர்ந்து நிற்கிறார். 3 படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியானது. படம் வெளியாகி தற்போது 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் 3 படம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் பேசுகிறார் என்றால் அந்த படம் அவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக பார்க்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











