Shruti Hassan: அப்பா பேசுறதே புரியாது... திருமணம் தேவையா..? கமல் ஸ்டைலில் ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!
சென்னை: உலக நாயகன் கமலின் மகளான ஸ்ருதிஹாசன், அவரது தந்தையை போலவே பன்முக கலைஞராக வலம் வருகிறார்.
தமிழில் சில படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கமே பிஸியாக காணப்படுகிறார்.
தற்போது பிரபாஸுடன் சலார் படத்தில் நடித்து வரும் ஸ்ருதி, விரைவில் தமிழிலும் ரீ-என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு கொடுத்த பேட்டியில் தனது திருமணம் குறித்தும், தந்தை கமல் பற்றியும் ஓப்பனாக பேசியுள்ளார்.
திருமணம் தேவையா வேண்டாமா..?
கமல் இயக்கிய ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். இசையில் அதிக ஆர்வம் கொண்ட அவர், திடீரென ஹீரோயினாகவும் அவதாரம் எடுத்தார். 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் தனது ஹீரோயின் கணக்கை தொடங்கினார். தற்போது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், தனது கேரியர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை திரும்பியுள்ள ஸ்ருதிஹாசன், முன்னணி இணையதளம் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார். அப்போது பேசிய ஸ்ருதி, "தெலுங்கில் ரொம்ப பிஸியாக நடித்து வருவதால், தமிழில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் அப்பாவை கூட பார்க்க முடியவில்லை, நான் இங்கு வந்த நேரம் அவர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாகிவிட்டார்" என்றுள்ளார்.
மேலும், "சின்ன வயது முதலே எனக்கு தமிழ்ப் பற்று இல்லை. அப்பா பேசும் தமிழ் பல நேரங்களில் எனக்கு சுத்தமாக புரியாது. மீண்டும் மீண்டும் கேட்டுதான் புரிந்துகொள்வேன். அதன்பின் தான் தமிழ் மீது ஒருவித ஈர்ப்பு வந்தது. எங்கு வேலை பார்த்தாலும், நான் தமிழ்ப் பொண்ணு தான். மும்பை நண்பர்கள் என்னை வெறுப்பேற்றுவார்கள். அவர்கள் தோசையை திட்டினால் கூட எனக்கு கோபம் வரும். அந்த அளவிற்கு தமிழ் சார்ந்த விசயங்களை விரும்புவதாக கூறியுள்ளார்.
அதேபோல், "அம்மாவும் அப்பாவும் இப்போதும் சினிமாவில் பிஸியாக உள்ளனர். நானும் பிஸியாக இருப்பதால் அவர்களிடம் தினமும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை, நேரம் கிடைக்கும் போது மட்டும் பேசுவேன். டார்க் சைடில் தான் எனக்கு வெளிச்சம் கிடைத்தது. அதனால் அதைதான் விரும்புகிறேன். அம்மாவும் அப்பாவும் ரொம்பவே ஓபன் டைப்பாக இருந்தும் அவர்களிடம் நான் எல்லாவற்றையும் பகிர்ந்ததில்லை" என கூலாக பேசியுள்ளார்.

மேலும், திருமணம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன். அதில், "திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் சமூகம் அதை விரும்புவதால் நானும் அதனை ஏற்கிறேன். அதேநேரம், எனக்கு திருமணம் தேவையா... வேண்டாமா? என்பதை நான் தான் முடிவு செய்வேன்" எனக் கூறியுள்ளார். அதேபோல், தமிழில் இப்போது கதை கேட்டுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் தமிழ் சினிமாவிலும் என்னை பார்க்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சிறு வயதில் இருந்தே சினிமா ஆசை இல்லை எனக் கூறிய ஸ்ருதி, இயக்குநர் அல்லது வழக்கறிஞர் ஆகும் விருப்பத்துடன் தான் பயணித்தாராம். பொங்கல் ஸ்பெஷலாக தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி, வால்டையர் வீரைய்யா படங்களில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











