'மகளை சினிமாவில் நடிக்க வைக்கிறீங்களே, கவலையில்லையா?' கமல் சொன்ன பதில்.. மகிழும் ஸ்ருதி ஹாசன்!
சென்னை: பாலிவுட்டில் உடன்படாத விஷயங்களுக்காக, அதிக விலை கொடுத்துள்ளேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கி உள்ளன.
முதலில் நெபோடிசம் பற்றிய பேச்சு பரபரப்பானது. வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக பேசப்பட்ட விவாதங்களால் பாலிவுட் சூடானது.

தீபிகா படுகோன்
இப்போது போதைப் பொருள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை ரியாக கைது செய்யப்பட்டுள்ளார். தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

கரண் ஜோஹர்
இந்நிலையில், கடந்த வருடம் கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர்கள் ஷாகித் கபூர், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், வருண் தவான், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா உள்பட பலர் உள்ளனர். பார்ட்டியில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் போதைப் பொருளை எடுத்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏற்புடையது அல்ல
இதை மறுத்துள்ளார் கரண் ஜோஹர். இந்நிலையில், பாலிவுட்டை சாக்கடை என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் இதுபற்றி இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசனிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், நாம் இருக்கும் தொழிலை பழித்துச் சொல்வது ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ளார்.

கவலைப் படவில்லையா?
இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: என் தந்தை ஒரு முறை சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒருவர் என் அப்பாவிடம், மகள்களை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக கவலைப்படவில்லையா? என்று கேட்டார். இந்த கேள்வியில் பல அடுக்குகள் இருக்கின்றன. என் அப்பா அதற்குப் பதிலளித்தார்.

தெரிந்தே அனுப்பினேன்
'உங்க மகளுக்கு அரேன்ஜ்டு மேரேஜ் செய்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாத ஒரு வீட்டுக்கு மகளை அனுப்பி வைத்திருக்கிறீர்கள். ஆனால் என் மகளை நான் வளர்ந்த வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். இது என் வீடு. தெரிந்தே அனுப்பினேன். வலிமையாக இருக்க கற்றுக் கொடுத்திருக்கிறேன்' என்றார். இதுதான் உண்மை.

போராட வேண்டியது
என்னைச் சுற்றி இருப்பவர்களால் எனக்கு ஆதரவானச் சூழல் கிடைத்திருக்கிறது. நீங்கள் வேறு எந்த துறையில் யாரிடம் கேட்டாலும் அவர்கள் துறையை பற்றி நல்லதாகவோ, கெட்டதாகவோ சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கும். ஆனால், நாம் செய்ய வேண்டியது அநீதிக்கு எதிராக போராட வேண்டியதுதான்.

விலை கொடுத்துள்ளேன்
எனக்கு உடன்படாத விஷயங்களை நான் ஒப்புக்கொள்வதில்லை என்பதை பெருமையாக சொல்வேன். அது பெரிய இயக்குனராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. இதற்காக நான் அதிக விலைகொடுத்துள்ளேன். எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் எனக்கு அங்கு நடிக்க விருப்பம் இல்லை என்று நினைக்கிறார்கள். அது பரவாயில்லை. இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











