சிவப்பு மஞ்சள் பச்சை எப்படியிருக்கு - சித்தார்த், ஜிவிபி சொல்றதை கேளுங்க
சென்னை: நடிகர் சித்தார்த் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ள காதலும் ஆக்ஷனும் கலந்து உருவான சிவப்பு மஞ்சள் பச்சை படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் சித்தார்த் போக்குவரத்து போலீசாராக நடித்துள்ளார். படத்தை தியேட்டரில் போய் பார்த்து ஆதரவு கொடுங்க என்று சித்தார்த்தும் ஜிவி பிரகாஷும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இயக்குநர் சசியின் உருவாக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிகர் சித்தார்த் இணைந்து நடித்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் இன்று மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.

பொதுவாகவே, வாகனம் ஓட்டுபவர்களில் ஒழுங்காக சாலை விதிகளை மதித்து நடப்பவர்கள் மிகக்குறைவே. சாலையின் சந்திப்புகளில் இருக்கும் சிக்னல்களை மதிக்காமல் செல்பவர்கள் தான் அதிகம் பேர் உள்ளனர். அங்குள்ள போக்குவரத்து காவலர்களையும் மதிக்காமல் செல்வது அன்றாடம் நடக்கிறது. போலீசார் இருந்தாலும் கூட, யாரோ ஒருவர் நிற்கிறார், நின்றுவிட்டு போகட்டுமே என்ற அகம்பாவத்தால் கடந்து செல்வது தினசரி நடப்பதுண்டு.
ஆனால், இதற்காக போக்குவரத்து போலீசார் காலை முதல் இரவு வரையிலும், வாகனங்கள் விடும் நச்சுப் புகைகளை சகித்துக்கொண்டும் சுவாசித்துக்கொண்டும் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாதது. அவர்களும் மனிதர்கள் தானே, நமக்காகத்தானே அவர்கள் கடமையை செய்கிறார்கள் என்ற எண்ணத்தை வாகன ஓட்டிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே நடிகர் சித்தார்த் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்துள்ளதாக அவரே கருத்து தெரிவித்துள்ளார்.

அதோடு, சித்தார்த் அன்றாடம் நடக்கும் சமூக அவலங்களை எதிர்த்து குரல் கொடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பது வழக்கம். ஆகவே தான் அவர் இந்தப் படத்தில் நடிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஸ்ட்ரீட் பைக் ரேஸ் ஓட்டுபவராகவும், சித்தார்த் கடமை தவறாத கண்ணியமான போக்குவரத்து காவலராகவும் நடித்திருக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக தீபா ராமானுஜம், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சித்தார்த் கடந்த 2016ஆம் ஆண்டில் அவள் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் இடையில் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இயக்குநர் சசி கடந்த 2016ஆம் ஆண்டில் பிச்சைக்காரன் படத்தை இயக்கியிருந்தார். அதற்கு பின்பு இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இதனாலும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படம் வெளியாவது குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷும் நடிகர் சித்தார்த்தும் இணைந்து பேசிய வீடியோவை இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
இத்திரைப்படம், போக்குவரத்து காவலர்கள் படும் அவஸ்தையை தெரிவிப்பதோடு, காதலோடு ஆக்ஷனும் கலந்து உருவாகியுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











