புஷ்பா 2வுக்கு கூடிய கூட்டம்.. பெரிய விஷயம் இல்லை.. விமர்சனம் செய்த சித்தார்த்.. என்ன காண்டோ தெரியல?
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 படம்தான் கடந்த சில நாட்களாக இந்திய சினிமாவிலேயே டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தியிருக்கிறது. வெளியான நான்கே நாட்களில் மொத்தம் 829 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. கண்டிப்பாக இப்படம் 2,000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்று பலரும் கூறிவரும் சூழலில்; சித்தார்த் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான படம் புஷ்பா. அந்தப் படத்தின் வணிக ரீதியான வெற்றிக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் உருவானது. சுகுமாரே இந்தப் படத்தையும் இயக்கியிருந்தார். முதல் பாகம் எப்படி வசூல் வேட்டை நடத்தியதோ அதைவிடவும் அதிகமாக புஷ்பா 2 வசூல் செய்யும் என்று டோலிவுட் திரையுலகம் தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தது. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங்கின்போது பல பிரச்னைகள் வந்ததாக பலரும் பேசினார்கள். ஒருவழியாக ஷூட்டிங் முடிந்து சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

மாபெரும் ஹிட்: பெரும் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்ற ரசிகர்கள் படத்தை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். முக்கியமாக தெலுங்கு ரசிகர்களை சொல்லவே வேண்டாம். திருவிழா போல் படத்தை கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். அதேசமயம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருப்பினும் படம் மொக்கை எல்லாம் இல்லை; சுமாருக்கும் மேல் என்றுதான் இங்கும் ரிசல்ட்டை பெற்றிருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் இதே நிலவரம்தான்.
படக்குழு செம ஹேப்பி: விமர்சன ரீதியாக படம் அப்படி இப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வேட்டையை நிகழ்த்தியிருக்கிறது. ஹிந்தியில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வசூலை முந்திய புஷ்பா 2; வெளியாகி நான்கே நாட்களில் 829 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்திருக்கிறது. இதன் காரணமாக படக்குழு செம ஹேப்பியில் இருக்கிறது. அதுமட்டுமின்றி கண்டிப்பாக இரண்டாயிரம் கோடி ரூபாயை படம் வசூலித்துவிடும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறது படக்குழு.
சித்தார்த் விமர்சனம்: இந்நிலையில் நடிகர் சித்தார்த் புஷ்பா 2 குறித்து பேசியிருக்கும் விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் புஷ்பா 2 குறித்து பேசிய அவர், "இந்தியாவில் கூட்டம் கூடுவது என்று பெரிய விஷயம் இல்லை. ஒரு ஜேசிபியை கொண்டு வந்து நிறுத்தினால்கூட கூட்டம் கூடத்தான் செய்யும். பீஹாரில் புஷ்பா 2 பட ப்ரோமோஷனுக்கு அவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கு மார்க்கெடிங்தான் காரணம். கூட்டம் கூடுவதற்கும் தரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எல்லா அரசியல் கட்சிகள்: அப்படி பார்த்தால் கூட்டம் கூடும் எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். இங்கு கரகோஷம் வாங்குவதெல்லாம் ரொம்ப ஈஸிங்க" என்றார். முன்னதாக சித்தார்த் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக மிஸ் யூ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்புதான் அவர் நடிகை அதிதியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











