சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் மன்னிப்பை ஏற்க மாட்டேன்.. சித்தா சக்சஸ் மீட்டில் சித்தார்த் பளிச்!
சென்னை: கர்நாடகாவில் சித்தா படத்தை புரமோட் செய்ய சமீபத்தில் சித்தார்த் சென்றிருந்த போது குறிப்பிட்ட கன்னட அமைப்பை சேர்ந்த சிலர் திடீரென அங்கே புகுந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
நடிகர் சித்தார்த்தை அந்த பிரஸ்மீட்டை நடத்த விடாமல் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதற்காக கன்னட நடிகர்களான சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டிருந்தனர்.

இந்நிலையில், சித்தா படத்தின் சக்சஸ் பிரஸ் மீட்டில் பேசிய சித்தார்த் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் மன்னிப்பை ஏத்துக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
எனக்கு என் படம் முக்கியம்: சித்தா படத்தை தயாரித்து நடித்துள்ளேன். இது எங்களுடைய 2 வருட உழைப்பு, அதற்கு மக்கள் நல்ல வரவேற்பையும் பலனையும் கொடுத்துள்ளனர். முதல் வாரம் முடிந்து இரண்டாம் வாரத்திலும் இந்த படம் அடியெடுத்து வைத்துள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் வெற்றிப் பெற்றுள்ளது.
நான் இங்கே எந்த அரசியலும் பேச வரவில்லை, காவிரி விவகாரம் குறித்து என்னிடம் கேட்காதீங்க, எனக்கு என் படம் முக்கியம். என் வயத்தில் எவனாவது எட்டி உதைத்தால் அதை பற்றி கேட்பேன் என பேசினார்.
மன்னிப்பை ஏத்துக்க மாட்டேன்: கன்னட நடிகர் சிவராஜ்குமார் சார், பிரகாஷ் ராஜ் சார் எல்லாம் ரொம்ப பெரியவங்க, அவங்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவங்க மன்னிப்பை நான் ஏத்துக்கவே மாட்டேன். கன்னட மக்கள் என் படத்தை ரசித்து பார்க்கிறாங்க, கன்னட சினிமா துறைக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஒரு அமைப்பை சேர்ந்த 10 பேர் தான் உள்ளே வந்து மிரட்டுனாங்க, அவங்களுடன் தான் பிரச்சனை மத்தபடி வேறு எதுவும் இல்லை என்றார்.
பந்த் இல்லை: நான் கர்நாடகாவில் ஒரு அரங்கில் பர்மிஷன் வாங்கி தான் பிரஸ் மீட் நடத்தினேன். அன்றைக்கு எந்த பந்த்தும் நடக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் தான் பந்த் அறிவித்திருந்தனர். நான் பணம் போட்டு தயாரித்த படத்தை முடிந்த வரை மக்களிடம் கொண்டு செல்ல போராடி வருகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் சங்கம் கண்டுக்கல: சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்ட உடனே இந்த பிரச்சனை பற்றி பேச வேண்டாம் என தயாரிப்பாளர் சங்கம் ஒதுங்கி விட்டது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளராக நான் இருக்கிறேன், இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த யாருமே என்னை தொடர்பு கொண்டு இது பற்றி பேசவில்லை. நாளைக்கு இன்னொரு தயாரிப்பாளருக்கு இப்படி நடக்கக் கூடாது என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











