ஜிகர்தண்டா ரிலீஸ் தேதியில் மாற்றம்: பின்னணியில் தனுஷ்?
ஜிகர்தண்டா திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 1ம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிகர்தண்டா படத்தின் ஹீரோ சித்தார்த் கொதிப்படைந்துள்ளார்.
இந்த ஒத்திவைப்புக்கு காரணம் தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படம்தான் என்று ஜிகர்தண்டா தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் 'ஜிகர்தண்டா'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கதிரேசன் தயாரித்திருந்தார். ரம்ஜான் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு ஜூலை 25ம் தேதி வெளியிடுவதாக தீர்மானம் செய்து, திரையரங்க ஒப்பந்தம் தொடங்கினார்கள். இந்நிலையில் தற்போது 'ஜிகர்தண்டா' படத்தின் வெளியீட்டை தற்போது ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
இதனால் ஹீரோ சித்தார்த்துக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தனது நிலை குறித்து நடிகர் சித்தார்த், சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். மேற்கொண்டு படியுங்களேன்.

குமுறும் சித்தார்த்
ஜிகர்தண்டா ரசிகர்களே..வெளியில் இருந்து வரும் சில ஏற்கத்தகாத அழுத்தங்களால், எங்களது படத்தை வெளியிடுவதில் தடை நீடித்து வருகிறது.

யாரையும் கேட்கவில்லை
கார்த்திக் மற்றும் எங்களது 'ஜிகிர்தண்டா' படக் குழு முழுவதும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளது. ஆனால் எங்கள் எவரையும் ஆலோசிக்காமல், படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளது நியாயமற்றது.

படத்தை வீழ்த்தமுடியாது
இது போன்ற மோசமான எண்ணங்களால், எங்கள் படத்தின் ரிலீஸை வேண்டுமானால் தள்ளி வைக்கலாம். ஆனால் படம் வெளிவருவதை தடுக்க முடியாது. ஒரு நல்லப் படத்தை யாராலும் வீழ்த்த முடியாது.

ரசிகர்கள் ஆதரவு தேவை
நாங்கள் எந்தவிதமான உதவியும் இன்றி நிற்கிறோம். சினிமா ரசிகர்கள் அனைவரும் எங்கள் படத்திற்கும், எங்கள் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கும் ஆதரவு தர வேண்டும். ஜிகர்தண்டா எப்போது ரிலீஸ் ஆனாலும், உங்களது ஆதரவு தேவை.

கடவுள் காப்பாற்றுவார்
சினிமாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஓர் அதிசயம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஜிகர்தண்டா விரைவில் வெளியாக வேண்டும்.

தயாரிப்பாளர் மறைத்துவிட்டார்
ஜிகர்தண்டாவின் தயாரிப்பாளர், தனது தனிப்பட்ட முறையில், ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு குறித்து மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எங்களுக்கு எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை. " என்று கூறியுள்ளார்.

வேலையில்லா பட்டதாரி
இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் கூறியபோது, தனுஷ் நடித்து வெளிவந்துள்ள வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கிற்கு கிடைத்த பெரிய வெற்றிப்படமாக திரையரங்கு உரிமையாளர்கள் கருதுகிறார்கள்.

ரிலீஸ் தேதியில் மாற்றம்
ஜிகர்தண்டா வெளியிடும் தேதியை மாற்றம் செய்தால் நல்லது என திரையரங்கு உரிமையாளர்கள் கருதினார்கள்.எனவே ஜிகர்தண்டாவை ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்.

எல்லோரும் ஜெயிக்கணும்
யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் படம் வாங்கிய அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











