சில்க் வாழ்க்கையை அனுமதியின்றி படமாக்குவதா? - இந்திப் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்
1980-களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் முன்னணியில் இருந்தார்.
1996-ல் சில்க்ஸ்மிதா சென்னையில் மர்மமாக இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், கொல்லப்பட்டார் என்றும் இருவிதமாக பேசப்பட்டது. ஆனால் போலீசார், தற்கொலை என்று வழக்கை முடித்துவிட்டனர்.
சில்க்ஸ் மிதாவின் வாழ்க்கை 'த டர்டி பிக்சர்ஸ்' என்ற பெயரில் இந்தியில் படமாகி வருகிறது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளன. விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதற்கிடையில் சில்க் ஸ்மிதா படத்தை வெளியிட அவரது சகோதரர் நாகவரபிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுப்பதாக பத்திரிகை, டெலிவிஷன்களில் செய்தி பார்த்து அறிந்து கொண்டோம். சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினராகிய எங்களிடம் படம் எடுப்பது பற்றி பேசவில்லை. அனுமதியும் பெறவில்லை.
எனவே இந்த படத்தை எடுக்க கூடாது என்று இயக்குனர் மிலன், தயாரிப்பாளர் ஏக்தாகபூர் ஆகியோருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அவர்களிடம் இருந்து பதில் இல்லை.
எனவே இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விரைவில் அனுப்பப்படும். சில்க்ஸ்மிதா படத்தை நாங்கள் பார்க்க வேண்டும். அதில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும்.
சில்க் ஸ்மிதா சாவின் பின்னணியில் உள்ள நிலவரம் இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. நிதி நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். அது உண்மையல்ல. சில்க்ஸ்மிதா பற்றி படம் எடுப்பவர்களிடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை. அந்த படம் மூலம் குடும்பத்தினர் மனம் புண்படக் கூடாது என்றே கருதுகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications












