நீங்கள் நாய்கள் அல்ல… நரிகள்... விஷால் அணியை வெளுத்து வாங்கிய சிம்பு
சென்னை: நீங்கள் நாய்கள் அல்ல... நரி மாதிரி வேலை செய்கிறீர்கள் என்று விஷால் அணியினரை விளாசித்தள்ளியுள்ளார் நடிகர் சிம்பு. சரத்குமார் மீது பெர்சனலாக உள்ள பகையை மனதில் வைத்து. நடிகர் சங்க பிரச்சினையை 7 கோடி மக்களிடம் கொண்டு போனது ஏன்? என்றும் சிம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர்.
சட்டசபை தேர்தலை விட போட்டியும், பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. நடிகர் சங்க கட்டிடத்தை இடித்தது பற்றி சரத்குமார் அணி மீது விஷால் அணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒருபக்கம் சண்டை நடந்தாலும் மறுபக்கம் சமாதான முயற்சியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகை ராதிகா, பாக்யராஜ், சிம்பு, ஊர்வசி உள்ளிட்ட சரத்குமார் அணியைச் சேர்ந்தவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

விளாசிய சிம்பு
ராதிகாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, நடிகர்களுக்கு இடையேயான ஒற்றுமையை விஷால் உடைக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.
இந்த தேர்தல் காரணமாக என்னுடைய சக நடிகர்கள் என்னை விரோதியாக பார்க்கின்றனர். நடிகர் சங்கம் சார்பில் எஸ்.பி.ஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தில் என்ன தவறு உள்ளது? என்று கேட்ட சிம்பு, அந்த இடத்தில் திரையரங்கம் வரவேண்டாம் என்று கூறுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

குற்றம் சொல்லவில்லை
சமரச பேச்சு வார்த்தைக்கு பூச்சி முருகன் முன்வரவில்லை.பூச்சி முருகன் போட்ட ஸ்டே ஆர்டரை வாபஸ் வாங்க சொல்லியிருக்க வேண்டும்.
நான் யாரை பற்றியும் தப்பா பேசலை. என் குடும்பத்திற்காக வந்திருக்கிறேன். 9 வயசுல இருந்து நடிக்கிறேன். இன்றைக்கு வந்த யாரோ குடும்பத்தை உடைக்க நினைக்கிறார்கள். நீ யார் என் குடும்பத்தை உடைப்பதற்கு என்று கேட்டார்.

கேப்டன் பதவி
கேள்வி கேட்க உனக்கு அருகதை இருக்கிறதா? இத்தனை நாட்களாக எங்கே இருந்தாய்? சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் ஆக விஷால் வந்த பின்னர் நான் கிரிக்கெட் விளையாடவில்லை. கிரிக்கெட் அணியின் கேப்டன் விஷாலும் கேப்டன் விஜயகாந்தும் ஒன்றா?. உனக்கு என்ன தகுதி இருக்கிறது?. கேப்டன் என்று கூப்பிட்டதால் விஷாலுக்கு தலைக்கனம் வந்துவிட்டது

நாய்கள் அல்ல நரிகள்
நடிகர் ராதாரவி ஒரு மூத்த கலைஞர் அவர் நாய் என்று திட்டியது தவறா?
நீங்கள் நாய்கள் அல்ல... நரி மாதிரி வேலை செய்கிறீர்கள். சரத்குமார் மீது பெர்சனலாக உள்ள பகையை மனதில் வைத்து. நடிகர் சங்க பிரச்சினையை 7 கோடி மக்களிடம் கொண்டு போனது ஏன்? என்று கேட்டார் சிம்பு.

ஒற்றுமை வேண்டும்
நாகரீகம் இல்லாத பண்பாடு இல்லாதவர்களிடம் கொண்டு போய் நடிகர் சங்கத்தை கொடுப்பதா? ஏமாற்றுகின்றனர். வரும் 11ம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கும் கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள். ஒற்றுமையை நிருபியுங்கள்.

பித்தலாட்டக்காரர்கள்
என் குடும்பத்தில் இருந்து என்னை பிரித்துவிட்டனர். இத்தனை ஆண்டுகள் நடந்த தேர்தலில் இதுபோல நடந்தது உண்டா. பித்தலாட்டம், பிரிவினை உண்டாக்குபவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம். பதவி ஆசையினாலேயே விஷால் அணி நடிகர் சங்கத்திற்குள் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார் சிம்பு.

அரசியல் வேண்டாம்
நடிகர் சங்கத்தை அரசியல் ஆக்கியது யாரு. இதற்கான அவசியம் என்ன? நீ பண்ணியது எல்லாம் போதும். எங்களுக்கு எந்த அணியும் வேண்டாம். நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. வாபஸ் வாங்கிக்கிறோம். பயத்துக்காக இல்லை. ஒற்றுமை முக்கியம். 11ம் தேதி உண்மையான நேர்மையான அத்தனை கலைஞர்களும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார் சிம்பு.

பேசி தீர்வு காண்போம்
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், நமக்குள் ஒற்றுமை முக்கியம் என்றார். இனிமேல் எந்த வித பிரச்சினையும் இன்றி ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொள்ளாமல் சமாதானமாக போக வேண்டும் என்றார்.

உணர்ச்சி வசப்படாதீங்க
கூட்டத்தின் முடிவில் சிம்புவிடம் பேசிய பாக்யராஜ், இந்த கூட்டத்தில நீங்க உணர்ச்சி வசப்பட்டு பேசியிருக்கக் கூடாது என்றார். இனி சமாதானம்தான் பேசவேண்டும். சண்டை வேண்டாம் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











