இதோ வந்துட்டேன் டா.. காட்டுறேன்.. வெற்றிமாறன், இரஞ்சித், மாரி செல்வராஜை திட்டிய சிம்பு பட இயக்குநர்
சென்னை: மாரி செல்வராஜ் கடைசியாக வாழை திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படத்தை தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருந்தார். படத்தை பார்த்த இயக்குநர்கள் பாலா, மிஷ்கின் உள்ளிட்டோர் எல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள். அவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் தங்களது பங்குக்கு படத்தை கொண்டாடினார்கள். இப்போது அவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கிவருகிறார்.
தமிழ் சமூகத்தில் சாதி என்னும் கொடிய விஷம் இன்னும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இப்போதைய நவீன உலகத்தில்கூட பல இடங்களில் சாதிய ரீதியான தாக்குதல்கள் நடக்கின்றன. அதனை கடுமையாக எதிர்த்து படம் செய்பவர்கள்தான் வெற்றிமாறன், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர். அவர்களது படைப்புகள் ஒவ்வொன்றும் சாதிய எதிர்ப்பையும், அத்தனை பேரும் சமம் என்பதையும் காத்திரமாக பதிவு செய்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எழும் எதிர்ப்புகள்: அவர்கள் அப்படி எடுத்த படங்கள் சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்புபவை. உதாரணத்துக்கு வெற்றிமாறனின் அசுரன், பா.இரஞ்சித்தின் மெட்ராஸ், மாரி செல்வராஜின் அத்தனை படங்களும் என தமிழ் சினிமாவுக்கு புதிய முகம் ஒன்றை மாட்டிவிட்டன. ஆனால் அந்தப் படங்களுக்கு ஒருதரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்துவருகிறார்கள். அதாவது இந்தக் காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள்; இவர்கள் தங்கல் படைப்புகள் மூலம் பிரிவினையை உண்டாக்குகிறார்கள் என்ற தட்டையான வாதத்தை முன்வைக்கிறார்கள்.

பொறுத்துக்கொண்டால் என்ன வந்தது?: அவர்களுக்கு இந்த மூன்று இயக்குநர்களின் ரசிகர்களும், சமத்துவம், சமூக நீதியை விரும்புபவர்களும் தக்க பதிலடியை கொடுத்துவருகிறார்கள். அதாவது எஜமான், சின்ன கவுண்டர், தேவர் மகன் என ஆதிக்க சாதியினரை உயர்த்திப் பிடித்த படங்கள் எல்லாம் இதே கோலிவுட்டில் வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்ட அவர்கள்; இப்போது ஒடுக்கப்பட்ட சாதியினரின் வலியை சொல்லும் படங்களை கண்டால் மட்டும் ஏன் எரிச்சல் அடைகிறார்கள் என்கிற கேள்வியை எழுப்பிவருகிறார்கள்.
தொடர்ந்து வர வேண்டும்: அதேபோல் இந்த மூவரும் இதே போன்றுதான் படங்களை எடுக்க வேண்டும். இனி வரும் தலைமுறையினராவது ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், வாழ்வியலையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த மூன்று பேரும் தங்களது நிலையிலிருந்து மாறப்போவதே இல்லை என்பதை பெரும்பாலான மேடைகளிலும், தங்களின் பேச்சுக்களிலும் தொடர்ந்து உணர்த்திக்கொண்டே வருகிறார்கள்.
இவர்களுக்கு எதிராக இன்னொரு கூட்டம்: இது ஒருபக்கம் இருக்க வெற்றி, இரஞ்சித், மாரி ஆகியோர் எடுக்கும் படங்களுக்கு எதிராக படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் இயக்குநர் மோகன் ஜி உள்ளிட்டோரும் ஆதிக்க சாதி மனப்பான்மையோடு படங்களை எடுத்துவருகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அந்தப் படங்கள் எல்லாம் அவர்கள் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்காமல்; கடுமையான ட்ரோல்களை சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்தபட்ச அறத்தோடு படத்தை எடுக்க வேண்டும்; வீம்புக்கு எடுத்தால் இப்படித்தான் ரிசல்ட் கிடைக்கும் என்ற கருத்தும் நிலவிவருகிறது.
தருண் கோபி காட்டம்: இந்நிலையில் திமிரு, காளை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான தருண் கோபி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "இரஞ்சித்துக்கும் சரி, வெற்றிமாறனுக்கும் சரி, மாரி செல்வராஜ் அவனுக்கும் சரி; இதோ நான் வரேன் டா; இதுவரை நடித்துக்கொண்டு இருந்தேன். இப்போ இயக்குவதற்கு வந்துவிட்டேன் டா. எங்கள் வாழ்வியலை காண்பிக்கிறேன் பார்க்குறியா?" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தருண் கோபி ஏன் இப்போது வான்ட்டடாக வந்து வண்டியில் ஏறுகிறார் என்று ட்ரோல் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











