தனுஷுக்கு போட்டியாக சிம்பு எடுத்த அதிரடி முடிவு… ரொம்ப முக்கியமான சர்ப்ரைஸ்ஸே இது தான்!
சென்னை: சிம்பு நடிப்பில் செப்டம்பர் 15ம் தேதி வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து பத்து தல ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சிம்பு, அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், தனுஷுக்குப் போட்டியாக சிம்புவும் ஒரு முக்கியமான முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நல்ல காலம் பொறந்தாச்சு
நடிகர் சிம்புவுக்கு இப்போது நல்ல காலம் பொறந்தாச்சு என்று தான் சொல்ல வேண்டும். திறமையான நடிகராக இருந்தாலும் பல சர்ச்சைகளால் ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்பு, கடந்தாண்டு வெளியான 'மாநாடு' மூலம் சூப்பரான கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' செப்டம்பர் 15ம் தேதி வெளியானது. இந்தப் படம் இப்போது திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனைப் படைத்து வருகிறது. இதனையடுத்து சிம்புவின் பத்து தல படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஏஜிஆர் என்ற கேங்ஸ்டாராக சிம்பு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய முடிவில் சிம்பு
பத்து தல படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் 26 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சிம்பு தனது அடுத்தப் படம் குறித்து டிஸ்கஷனில் தீவிரமாக இருக்கிறாராம். சிம்பு நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான 'மன்மதன்' திரைப்படம், சூப்பர் ஹிட் அடித்தது. சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படத்தின் கதை, திரைக்கதையை சிம்பு எழுதியிருந்தார். சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, முருகன் இயக்கியிருந்தார், யுவன் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2006ல் வெளியான 'வல்லவன்' படத்தை சிம்பு இயக்கியிருந்தார். சிம்புவுடன் நயன்தாரா, ரீமா சென், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த 'வல்லவன்' படமும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தனுஷுக்கு போட்டியாக சிம்பு
வல்லவன் படத்துக்குப் பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் சிம்பு. அதன்படி 2017ல் பாடல்கள், இண்டர்வெல் எதுவும் இல்லாமல் ஒரு படம் இயக்கவுள்ளதாக சிம்பு தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், சிம்பு மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநரான தனுஷ், 5 ஆண்டு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கவுள்ளார். அதனால், சிம்புவும் தனது அடுத்த படத்தை சீக்கிரமே இயக்க முடிவு செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்புவின் 50வது படமா?
சிம்பு இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் அவரின் 50 அல்லது 51வது படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இத்திரைப்படம் 2024ல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக வெளியான தகவல், கோலிவுட் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பை தான் ஏற்படுத்தியுள்ளது. மாநாடு படத்திற்கு பின்னர் அவரின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளதோடு, கமல்ஹாசனுடனும் அதிக நெருக்கம் காட்டி வருவது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஏற்கனவே சிம்பு தன்னுடன் இணைந்து நடிக்க வேண்டும் என விக்ரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











