Simbu: "சிக்கல்களை சல்லடையாக்கி சரித்திரம் கண்ட மாநாடு..” சிம்பு ரசிகர்களுக்கு தக் லைஃப் மொமண்ட்!
சென்னை: சிம்புவுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் மாநாடு.
வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

சிம்புவுடன் எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், மாநாடு வெளியாகி இன்றோடு 2 ஆண்டுகள் ஆனதை அடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சியாக போஸ்ட் போட்டுள்ளார்.
சரித்திரம் கண்ட சிம்புவின் மாநாடு
கோலிவுட்டின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்பு தற்போது தனது 48வது படத்தில் நடித்து வருகிறார். தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்புவுக்கு தரமான கம்பேக் கொடுத்தது மாநாடு திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படம், 2021 நவம்பர் 25ம் தேதி வெளியானது.
சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்தப் படத்தில், சிம்புவுடன் எஸ்ஜே சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, விஜய் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டைம் ட்ராவல் பின்னணியில் பொலிட்டிக்கல் படமாக உருவான மாநாடு, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மாநாடு வெற்றி தான் சிம்புவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.
இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது முகநூலில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு பெரும் பயத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் நடுவே பயணித்த தருணம். தன்னம்பிக்கை கொஞ்சம் தூக்கலாகச் செல்ல வெல்ல முடிந்தது. அதுவொரு வெல்ல வெற்றிதான். இனிப்பானது. மாநாடு படத்தின் அனுபவத்தைத் தான் சிலாகிக்கிறேன்."
“இன்றோடு இரண்டு வருடங்கள் நிறைவு பெறுகிறது. எல்லோருக்கும் மகசூலைத் தந்த படம். விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அயல்நாட்டு வணிகம், வாங்கி விற்றவர்கள், மற்ற மொழி விநியோகஸ்தர்கள் எல்லோருக்கும் முக மலர்ச்சியையும், வெகுநாட்ளுக்குப் பின்னான மகத்தான வசூலையும் பரிசளித்த படம். வெளியீட்டுச் சிக்கல்களையும் சல்லடையாக்கி சரித்திரம் கண்டது. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.”
“இப்படம் இதில் உழைத்த அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறது. நான் உட்பட. அன்பு இளவல் சிம்பு, இயக்குநர் வெங்கட்பிரபு, இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எடிட்டர் பிரவீண் கே.எல், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர், அயராது உழைத்த கலை இயக்குநர் உமேஷ் யாதவ், இயக்குநர் எஸ்ஏசி, ஒய்ஜி மகேந்திரன், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், உதயா, மனோஜ் கே பாரதி, பஞ்சு சுப்பு, மகத் ராகவேந்திரா, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, டேனியல் அன்னி போப், கிருபா என பலரின் உழைப்பால் உருவான படம்.”
“வெளியீட்டில் கைகொடுத்த எஸ்.எஸ்.ஐ புரொடக்ன்ஸூக்கு நன்றி. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அயல்நாட்டு வணிகம், வாங்கி விற்றவர்கள், மற்ற மொழி விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி. ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள், ஒலிக்கலவை, டிஐ செய்த நண்பர்கள், நளபாகக் கலைஞர்கள், லைட்மேன்கள், எனது மக்கள் தொடர்பாளர் A. ஜான், டிஸைனர் ட்யூன் ஒன் ஜான், 24 ஏஎம், இதை வெற்றியாக்கிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என் மனதிலிருந்து நன்றிகள்.”
“தயாரிப்பு நிர்வாகி விஜி சுப்பிரமணியன், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், தயாரிப்பு மேலாளர்கள், அலுலலகப் பணி மேற்கொண்ட பிரவீண், மாலிக் ஆயிஷா ஆகியோருக்கும் என் நன்றிகள். யாரையாவது பெயர் விட்டுப் போயிருந்தால் மன்னியுங்கள். உங்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக. இரண்டாம் ஆண்டை மகிழ்வோடு ஏற்போம். சிலம்பரசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் என் மனதில் எப்போதும் பெரிய இடமுண்டு. வாழ்வோம். வாழ வைப்போம். நல்லதே நடக்கட்டும். சிலம்பரசனின் 2 Yrs Of Maanaadu” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
2021 தீபாவளிக்கு வெளியாகவிருந்த மாநாடு, கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. மேலும், பல தடைகளுடன் நவம்பர் 25ம் தேதி ரிலீஸான மாநாடு எதிர்பாராத வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











