காவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா!
சென்னை : கடந்த மாதம் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க சிறப்புக் கூட்டத்தில் நடிகர் சிம்பு முன்வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தற்போது செயல்படுத்தப்பட இருக்கிறது. ஜூன் 1 முதல் கணினிமயமாக்கப்பட்ட டிக்கெட் விற்பனை செயல்படுத்தப்படுகிறது.
திரையுலகினர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டபோது கடந்த மார்ச் 21-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சிம்புவும் கலந்துகொண்டார். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றோடு மோதலில் இருக்கும் சிம்பு இதில் கலந்துகொண்டு பேசினார்.

நடிகர்களுக்கும் அவர்களது படங்களின் உண்மையான வசூல் நிலவரம் தெரிய வேண்டும். அதை தியேட்டர்கள் நடிகர்களுக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும். அதைப் பொறுத்து நடிகர்கள் அவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்வார்கள். எனப் பேசினார் சிம்பு.
சிம்புவின் கோரிக்கை கருத்தில் கொள்ளப்படும் என அப்போதே விஷால் தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ட்ரைக் முடிவடைந்ததை தொடர்ந்து ஜூன் 1 முதல் வெளிப்படையான கணினிமயமாக்கப்பட்ட டிக்கெட் விற்பனை செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் விஷால்.
இதன்மூலம் நடிகர்களுக்கும் அவர்களது படங்களின் வசூல் விவரம் தெரியவரும். அதன்மூலம் தங்களது சம்பளத்தை நிர்ணயிக்கலாம். இதனால், படம் நஷ்டமடைந்தால் தயாரிப்பாளர் மட்டும் பெருமளவில் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.
இன்று நடிகர்களின் சம்பளம் தொடர்பாகவும் நடிகர் சங்கத்தில் கூட்டம் நடைபெற இருக்கிறது. நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கவேண்டும் என தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்ததால் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











