புதிதாக கிளம்பிய KDM பிரச்சனை.. இன்னும் பல தியேட்டர்களில் மாநாடு வெளியாகவில்லை.. தள்ளிப்போன FDFS
சென்னை: சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்கு என்னப்பா இப்படி சோதனை மேல் சோதனையாக வருகிறதே என டிக்கெட் வாங்கிய அத்தனை ரசிகர்களும் புலம்பித் தள்ளி வருகின்றனர்.
மற்ற நடிகர்களின் சமீபத்திய படங்கள் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக வெளியான நிலையில் இந்த படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை தடங்கல்கள் என கேட்டு வருகின்றனர்.
பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது இன்று காலை 5 மணிக்கு ஸ்பெஷல் ஷோ போடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னமும் பல திரையரங்குகளில் FDFS ஆரம்பிக்கவில்லை.

ஒரே டைம் லூப்பா இருக்கே
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரேம்ஜி நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் டைம் லூப் கான்செப்டில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம். ஆனால், படம் வெளியாகுமா? இல்லையா? என்பதே ஒரே டைம் லூப் ஆன மாதிரி நிஜத்திலும் ஆகிடுச்சே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

சிம்பு அழுகை
என் படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் பல பிரச்சனைகள் கொடுக்கிறாங்க.. அந்த பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன். என்னை மட்டும் நீங்க பார்த்துக்கோங்க என ரசிகர்கள் மத்தியில் சமீபத்தில் நடந்த மாநாடு பிரஸ்மீட்டில் கண்ணீர் விட்டு சிம்பு கதற அத்தனை ரசிகர்களும் டிக்கெட் புக்கிங் ஆரம்பம் ஆனதும் ஆஜராகி ஹவுஸ்ஃபுல் ஆக்கினர்.

தடைகளை தாண்டி
நேற்று மாலையே மனமுடைந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகாது மன்னித்துக் கொள்ளுங்கள் என அவசரப்பட்டு ட்வீட் போட்டு ரசிகர்களை அப்செட்டில் ஆழ்த்தினார். அதன் பின்னர் இரவு இயக்குநர் வெங்கட் பிரபு அத்தனை பிரச்சனைகளும் முடிந்து விட்டது தடைகளை தாண்டி திட்டமிட்டபடி நாளை காலை 5 மணிக்கு மாநாடு ரிலீஸ் என்று அறிவித்தார்.

தியேட்டர் வாசலில் ரசிகர்கள்
மாநாடு படம் ஒரு வழியாக வெளியாகப் போகிறது அதனை பார்த்து தியேட்டரை தெறிக்கவிடலாம் என தூக்கத்தை எல்லாம் விடுத்து அலாரம் வைத்து தியேட்டர் வாசலில் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட தயாரான ரசிகர்கள் படம் இன்னும் வெளியாகவில்லை புதிய பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் போடுவோம் பொறுமையா இருங்க என தியேட்டர் ஓனர்கள் சொல்ல கடுப்பாகி விட்டனர்.

கேடிஎம் பிரச்சனை
மாநாடு திரைப்படம் எதிர்பார்த்த படி ரோகிணி, கங்கா, காசி உள்ளிட்ட ஏகப்பட்ட தியேட்டர்களில் இன்னமும் காலை காட்சி ஆரம்பமாகவில்லை. கேடிஎம் பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. காலை 9 மணிக்கு மேல் தான் ஷோ ஆரம்பிக்கும் என்றும் பல தியேட்டர்களில் 11 மணி காட்சி தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேடிஎம் பிரச்சனை என்றால் என்ன
மாநாடு திரைப்படம் இன்று அதிகாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் KDM பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தாமதம் ஆனது. KDM - Key Delivery Message என்றால் தியேட்டரில் படத்தை க்யூப் எனும் சாட்டிலைட் முறையில் திரையிடுவதற்கான encrypted கோட் ஆகும். இது திரையரங்குகளுக்கு கொடுக்கப்பட்டால் தான் படம் ரிலீசாகும்.


Click it and Unblock the Notifications











