தினமும் கொரோனா டெஸ்ட்.. சித்த மருத்துவக் குழுவை அழைத்துச் சென்ற சிம்புவின் 'மாநாடு' படக்குழு
சென்னை: சிம்புவின் மாநாடு படக்குழு, படப்பிடிப்புக்கு சித்த மருத்துவரை கண்காணிப்புக்கு வைத்துள்ளது.
நடிகர் சிம்பு, இப்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதை வெங்கட்பிரபு இயக்குகிறார்.
படத்தை, வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன்
இவர், 'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' படங்களைத் தயாரித்தவர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ்ஏசி, ஒய் ஜி
மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா உட்பட பலர் நடிக்கின்றனர்.

கொரோனா தாக்கம்
இதில், அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார், சிம்பு. படத்துக்காக உடல் எடையை அவர் குறைத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

மருத்துவர் வீரபாபு
இந்நிலையில், புதுச்சேரியில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. கொரோனா தாக்கம் முழுமையாக நீங்காத நிலையில், படக்குழுவினருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என முடிவு செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சித்த மருத்துவர் வீரபாபுவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

மூலிகை கசாயம்
வீரபாபுவின் மேற்பார்வையில், படக்குழுவினர் அனைவருக்கும் படப்பிடிப்பு துவங்கும் முன்பே கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவர் குழுவின் சார்பில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் மூலிகை கசாயம் வழங்கப்படுகிறது. அவர் வழிகாட்டுதலின்படி ஆரோக்கியமான உணவுமுறையும் பின்பற்றப்படுகிறது.

பாராட்டு பெற்றவர்
கொரோனா தாக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சித்த மருத்துவர் வீரபாபு, இரவு பகல் பாராமல் தனது சிகிச்சை முறை மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலரை குணப்படுத்தி பாராட்டை பெற்றவர். என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











