அஜித் தந்தை மறைவு.. ஆழ்ந்த இரங்கல் சொன்ன சிம்பு.. கொச்சியில் சிக்கிக் கொண்ட ரஜினிகாந்த்
சென்னை: நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மறைவு செய்தி அறிந்த நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்திருந்தால் முதல் ஆளாக ஓடோடி வந்திருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொச்சியில் ஜெயிலர் பட ஷூட்டிங்கில் இருப்பதால் வர முடியாத சூழல் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அஜித் தந்தை காலமானார்
பி.எஸ். மணி என அழைக்கப்படும் சுப்பிரமணியம் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85. நடிகர் அஜித்தின் தந்தை சில ஆண்டுகளாகவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் அரசியல் தலைவர்களையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் பெருந்துயரில் ஆழ்த்தி உள்ளது.

பிரபலங்கள் இரங்கல்
அஜித்தின் தந்தை மறைவு செய்தியை கேட்டதுமே பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சில முக்கியமான பிரபலங்கள் நேரிலேயே வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்
லியோ படத்தின் காஷ்மீர் போர்ஷன் முடிவடைந்த வீடியோ நேற்று வெளியான நிலையில் சென்னை திரும்பிய நடிகர் விஜய் தனது நண்பர் அஜித்தின் அப்பா மறைந்த செய்தி கேட்ட உடனே காரை எடுத்துக் கொண்டு நேரடியாக அஞ்சலி செலுத்த வந்துள்ளார். மேலும், நடிகர் அஜித்தையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

சிம்பு இரங்கல்
சினிமாவில் இளம் நடிகர்கள் பலரும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களாக உள்ளனர். அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு நடிகர் அஜித்தின் தந்தை பி.எஸ். மணி உயிரிழந்த செய்தி கேட்டதுமே மனவேதனை அடைந்துள்ளார். மேலும், நடிகர் அஜித்துக்கு ஆறுதல் கூறும் வகையில் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் சிம்பு.

வலிமை கொடுக்கட்டும்
அஜித் சார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் இருந்து நீங்கள் மீண்டு வர இறைவன் தேவையான வலிமையை கொடுக்கட்டும். அஜித்தின் தந்தை பி.எஸ். மணியின் ஆன்மா சாந்தியடையட்டும் என நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கொச்சியில் சிக்கிய ரஜினிகாந்த்
திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என யார் இழப்பாக இருந்தாலும் முதல் ஆளாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது கொச்சியில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் சிக்கிக் கொண்டார். அதன் காரணமாகவே நடிகர் அஜித்தின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் அவர் வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











