'முதலில் இதைப் பண்ணுங்க...' - ரஜினி, கமலை போட்டுத்தாக்கிய நடிகர் சிங்கமுத்து!
ஈரோடு : அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஈரோடு சூரம்பட்டி பகுதியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளரும், நடிகருமான சிங்கமுத்து கலந்து கொண்டு பேசினார்.
ரஜினியும், கமலும் அரசியலுக்கு வரவிருப்பதாகச் சொல்லப்படுவதைப் பற்றிக் காரசாரமாகப் பேசினார் சிங்கமுத்து.

ரெண்டுமே புரியாது :
'நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க-வை தொடர்ந்து குறை கூறிவருகிறார். இவர் பேசுவதில் அண்ணன் விஜயகாந்தை போன்றவர். காரணம் இரண்டு பேர் பேசுவதும் யாருக்குமே புரியாது.

குறை சொல்வதை நிறுத்தணும் :
கமல் தாராளமாக அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்கள் பணியாற்றும் இந்த அரசைக் குறை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றுங்கள். அப்புறம் அரசியல் பணியாற்றலாம்.

பிக்பாஸ் நாட்டுக்குத் தேவையா? :
ஜனநாயக நாட்டில் மக்கள் ஓட்டுப் போட்டால் யார் வேண்டுமானாலும் முதல் அமைச்சர் ஆகலாம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வை தவிர மக்கள் வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நாட்டுக்கு தேவையா?

எந்த பலனும் இல்லை :
ரஜினிகாந்த் இளம் வயதில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் போது நடிக்கப் போய்விட்டார். இப்போது வயதாகி முதுமை கண்டு விட்டார். இனி அவர் அரசியலுக்கு வந்தாலும் எந்த பலனும் இல்லை.

மக்களுக்கு செலவு செய்தீர்களா? :
இப்போது முடிந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் என்று ரஜினி கூறுகிறார். நீங்கள் சம்பாதித்த பணத்தில் இதுவரை எவ்வளவு பணத்தை மக்களுக்காகச் செலவு செய்தீர்கள்?

சொத்துகளை எழுதி வையுங்கள் :
நீங்கள் நடியுங்கள், சம்பாதியுங்கள். ஆனால் ஆட்சி செய்ய ஆசைப்படாதீர்கள். இல்லை என்றால் சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு அரசியலுக்கு வாருங்கள்.

மக்கள் ஏற்க மாட்டார்கள் :
நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள். இனி தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள்வான்.' என நடிகர் சிங்கமுத்து பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











