Anuradha Sriram Birthday: கணவருடன் காதல் மலர்ந்த தருணம்.. அனுராதா ஸ்ரீராமின் ஸ்வீட் மெமரீஸ்!
சென்னை: பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் சினிமாவில் மட்டுமில்லாமல் இசைக் கச்சேரிகளிலும் மிகச்சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ளார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவில் தொடர்ந்து நடுவராக பங்கேற்று போட்டியாளர்களை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் அனுராதா.
இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிவரும் அனுராதா ஸ்ரீராமிற்கு சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரிலும் அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கணவர் மீது காதல் ஏற்பட்ட தருணம் குறித்து பகிர்ந்த அனுராதா ஸ்ரீராம்: பின்னணி மற்றும் கர்நாடக இசைப் பாடகியாக சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறார் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இவர் இதுவரை 4000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவரது முதல் பாடல் மின்சார கனவு படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அமைந்தது. அன்பென்ற மழையிலே என்ற பாடலை பாடி அனைவரையும் இசைமழையில் நனையவிட்டார் அனுராதா ஸ்ரீராம்.
இந்தப் பாடலுக்கு முன்னதாகவே, பம்பாய் படத்தில் மலரோடு மலரிங்கு என்ற பாடலை கோரசாக இணைந்து பாடியுள்ளார். தன்னுடைய 6வது வயதில் இருந்தே இசைப்பயிற்சியை துவங்கிய அனுராதாவிற்கு தற்போதுவரை அந்தப் பயணம் சிறப்பாக அமைந்து வருகிறது. தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் இவர் நடுவராக செயல்பட்டு, போட்டியாளர்களை பயமின்றி பாட வைத்து வருகிறார். அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் அனுராதா தவறுவதில்லை.
இதுவரை 1000க்கும் மேற்பட்ட இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ள அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய கணவரை முதல்முறையாக அமெரிக்காவில் ஒரு கச்சேரிக்காக சென்றபோதுதான் சந்தித்துள்ளாராம். இவர்களின் நட்பு, தொடர்ந்து பல சந்திப்புகளை கொடுத்த நிலையில், ஒருநாள் ஸ்ரீராம் வீட்டிற்கு சென்ற அனுராதாவிற்கு அவர்களின் குடும்பத்தினரை பார்த்ததும் பிடித்துவிட்டதாம். அவர்கள் அனைவரும் இணைந்து ஒருசேர அமர்ந்து பாடல்களை பாடியது அனுராதாவை இம்ப்ரஸ் செய்துள்ளது.
இதை தொடர்ந்தே அனுராதாவிற்கு ஸ்ரீராம்மீது காதல் பிறந்துள்ளது. தொடர்ந்து இவர்களது காதலை அங்கீகரித்த குடும்பத்தினர் திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஸ்ரீராமும் கர்நாடக இசையில் தேர்ந்தவர். இந்நிலையில் அனுராதா ஸ்ரீராம், தன்னுடைய பேட்டியொன்றில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார். தங்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தபின்பு வீட்டிலுள்ளவர்கள் தங்களது ஜாதகப் பொருத்தத்தை பார்த்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
அப்படி ஜாதகப் பொருத்தம் பார்த்தபோது, தனக்கும் ஸ்ரீராமிற்கும் 2 திருமண பொருத்தம் மட்டுமே இருந்ததாகவும் திருமணத்திற்கு முன்பு இந்த விஷயம் தெரிந்திருந்தால் குடும்பத்தினரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஜாதகப் பொருத்தத்தை காட்டிலும் மனப் பொருத்தமே மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் அனுராதா ஸ்ரீராமிற்கு பில்மிபீட் சார்பில் நாமும் வாழ்த்துக்களை பகிர்வோம்.


Click it and Unblock the Notifications











