சென்று வாருங்கள் சகோதரரே.. இளையராஜாவின் டிரம்மர் மரணம்.. பிரபல பாடகர் இரங்கல்!
சென்னை: இளையராஜாவின் இசைக் குழுவில் நீண்ட ஆண்டுகளாக டிரம்மராக இருந்த புருஷோத்தமன் மரணம் அடைந்த செய்தி இசைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் இசை ட்ரூப்பில் அன்னக்கிளி படம் முதல் தற்போது வரை டிரம்மராகவும் கண்டக்டராகவும் இருந்தவர் புருஷோத்தமன். புருஷோத்தமன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரவித்து விருகின்றனர்.

புருஷோத்தமனுடன் நீண்ட ஆண்டுகள் பணிபுரிந்து வந்த பாடகர் அருண்மொழி( நெப்போலியன் செல்வராஜ்) தனது பேஸ் புக் பக்கத்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
"அன்பு புருஷோத்தமன் அவர்களே, தாங்கள் மறைந்த அந்தத் துயரச் செய்தி தங்கள் தமையன் திரு.சந்திரசேகர் வழியாக அறிந்தேன்! நானுட்பட இசைக்கலைஞர்கள் அத்துனை பேரும் அதிர்ந்து போனோம்! தொலைபேசி வாயிலாக துக்கத்தை பறிமாரி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டோம்!

தாங்கள் மறைந்துபோனாலும் தங்களின் இதயத் துடிப்பைத் தாளங்களாக்கி எத்தனை எத்தனை விதங்களில், கிட்டத்தட்ட இசைஞானியின் எல்லாப் பாடல்களிலும் முத்திரை பதித்துவிட்டே இறையடி பயணித்திருக்கிறீர்கள்!
ஒரு முறை துபாயில் நடந்த இசைநிகழ்ச்சியில் இசைஞானி தங்களை அறிமுகம் செய்கையில் தாங்கள் அன்னக்கிளி தொடங்கி இன்றுவரை உடன் பயணித்துக்கொண்டிருப்பவர் என்பதைச்சொல்லி, தன்னுடன் தோளோடு தோள்கொடுத்து கடினமாய் உழைப்பவர் என்று சிலாகித்ததை நினைவு கொள்கிறேன். எனக்குத் தெரிந்து வேறு யாரையும் இது போல இசைஞானி சென்னதில்லை என்று நினைக்கிறேன்.

தாங்கள் மறைந்தாலும் உலகம் உள்ளவரை தங்கள் நாதம் எங்கோ ஓரிடத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை! சென்று வாருங்கள் சகோதரரே! தங்களின் ஆன்மா இளைப்பாற்றலுக்காக எங்களின் வேண்டுதல்கள்" என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











