விரும்பிய இடத்தில் ஜிப்பை கழட்டும் ஆண்.. எஸ்.வி.சேகருக்கு சின்மயி சரியான பதிலடி!
சென்னை: அந்த பெண் ஏன் புதருக்கு போனா? புதருக்குள் போலீஸ் விளக்கு போட முடியுமா? பாலியல் குற்றங்கள் குறித்து எஸ்.வி.சேகர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில், பாடகி சின்மயி எஸ்.வி.சேகரின் பேச்சை கண்டித்து சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று திருமண விழாவில் பேசிய எஸ்வி சேகர், குழந்தைகளுக்கு கல்வியை விட கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். எல்லா இடத்திலும் டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதால் தான், மக்கள் கெட்டுப் போகிறார்கள் என சொல்கிறார்கள். எத்தனையோ மருந்துக் கடைகளில் விஷம் கூடத்தான் விற்கப்படுகிறது, அதற்காக நாம் அதை வாங்கிப் பருகுகிறோமா? நாம் செய்யும் தவறுக்கு அரசாங்கத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்?

எஸ்விசேகர் பேச்சு: தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என் வீட்டு பீரோவைப் பூட்டாமல் விட்டுவிட்டு, திருடன் திருடிவிட்டான் என்றால் அதற்குச் சட்டம் ஒழுங்கு எப்படிப் பொறுப்பாகும்? பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியே கழிவறைக்கு சென்றால் கூட துணைக்கு ஆள் செல்ல வேண்டும். சுதந்திரத்தை விட முதலில் நமக்கு பாதுகாப்பு தான் முக்கியம். பாலியல் குற்றங்கள் குறித்து பேசும்போது அந்த பெண் புதருக்குள் போனதாக சொல்கிறார்கள். அவர் ஏன் அங்கு போனார். புதருக்குள் போலீஸ் விளக்கு போட முடியுமா? என பேசி இருந்தார்.
சின்மயி பதிலடி: எஸ்.வி.சேகரின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளாகி பலரும் அவரை கடுமையான விமர்சித்து வரும் நிலையில், இதை கடுமையாக கண்டித்துள்ள பாடகி சின்மயி, தனது எக்ஸ் தள பக்கத்தில்,எஸ்.வி.சேகர் பேசிய வீடியோவை பதிவிட்டு, தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண், ஏன்? வனப்பகுதியில் உள்ள புதர்களுக்குப் பின்னால் சென்றார் என்று திரு எஸ்.வி. சேகர் கேட்பது போல் தெரிகிறது. காவல்துறையினரால் புதருக்கு லைட் போட முடியாது என பேசி இருக்கிறார்.
உங்களுக்கு புரியாது: கழிவறைகள் மற்றும் குளியலறைகள் இல்லாத இந்த ஊரில், அந்தப் பெண் தனது இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில், இளம் பெண்களும் சிறுமிகளும் இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்லும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆனால், உடல் காயம் ஏற்படும் என்ற அச்சமின்றி, தாங்கள் விரும்பும் இடத்தில், விரும்பும் போதெல்லாம், பாதுகாப்பாக தங்கள் ஆடையின் ஜிப்பைக் கழற்றி சிறுநீர் கழிக்கக்கூடிய ஆண்களால் இதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











