பாடகி சின்மயி: தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லையா.. நடிகர் ஜீவாவிற்கு சின்மயி கேள்வி!
சென்னை: காலங்காலமாக சினிமாவில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் பெண்கள் பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்துதான் வருகின்றனர். இருந்தபோதிலும் சினிமாவில் இது கொஞ்சம் அதிகம்தான். பல்வேறு பிரச்சினைகளை நடிகைகள் வெளிப்படுத்தாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்ட மீ டூ இயக்கத்தின்போது பல்வேறு பாலியல் ரீதியான பிரச்சினைகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல நடிகைகளும் தாங்களும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டதாக தற்போது தெரிவித்து வருகின்றனர்.

ஹேமா கமிட்டி அறிக்கை: காலங்காலமாக சினிமாவில் மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் சந்தித்துதான் வருகின்றனர். சில பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தாலும் அவை அப்படியே சில தினங்களில், வாரங்களில் அமுக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கும் யோசிப்பதற்கு ஆயிரம் பிரச்சினைகள் உள்ள நிலையில், இதை மறந்துவிடும் சூழல் இருந்துக்கொண்டிருக்கிறது. பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சினிமாவில் அதிகம்தான் என்பதை மறுக்க முடியாது. கலர்புல்லான வாழ்கையை பரிசளிக்கும் திரைத்துறை இத்தகைய அவலங்களையும் பெண்களுக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
வெளியான அறிக்கை: அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டில் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், இந்த விஷயத்தில் கேரள நடிகைகள் உள்ளிட்ட பலரும் தங்களது போராட்டங்களை முன்னெடுத்தனர். இதையடுத்து ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு இந்த விஷயத்தில் ஏராளமானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடந்த 2019ம் ஆண்டிலேயே இதன் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்த காரணத்தினால் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
ஜீவா காட்டம்: இந்த அறிக்கை கொடுத்துள்ள தாக்கம் கேரளாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பல்வேறு விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கிறது. அந்த வகையில், அடக்கி வைத்த தங்களது பிரச்சினைகள் குறித்து பலரும் தற்போது வாய்திறந்து வருகின்றனர். இந்த விஷயத்தில் எப்படி செயல்பட்டோம் என நடிகைகள் ராதிகா, குஷ்பூ உள்ளிட்டவர்களும் பேசியுள்ளனர். பல நடிகர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் நடிகர் ஜீவாவிடம் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில் கொந்தளித்த நடிகர் ஜீவா, தமிழில் இத்தகைய பாதிப்புகள் இல்லை என்றதுடன், கேள்வி கேட்ட செய்தியாளரை பார்த்து அறிவு இருக்கா என்று கேட்டதையும் பார்க்க முடிந்தது.
ஜீவாவிடம் சின்மயி கேள்வி: இந்நிலையில் நடிகர் ஜீவாவின் இந்த பதிலுக்கு பாடகி சின்மயி கோபத்துடன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளார். தமிழில் பாலியல் சீண்டல்கள் இல்லவே இல்லை என்று அவர்கள் எப்படி கூறுகிறார்கள் என்றும் தனக்கு புரியவே இல்லை என்றும் சின்மயி தன்னுடைய பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து சினிமாவில் பல விஷயங்களை கேள்வி எழுப்பி வரும் சின்மயி, இந்த விஷயத்திலும் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











