Chithra: உன்னை இழந்த வலி.. மகள் நினைவு நாளில் கலங்கும் பாடகி சித்ரா!
சென்னை: எத்தனையோ பெண் பாடகிகள் இருந்தாலும், பாடகி சித்ராவிற்கு என்று தனி இடம் உண்டு, சின்னக்குயில், இசைக்குயில் என்று ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்து வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி தாய்மொழியான மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 35 வருடங்களாக பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்து வரும் சித்ராவிற்கு, தனது அன்பு மகளை பறிகொடுத்த மறையாத காயம் இருக்கிறது. மகளில் நினைவு நாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் சித்ராவை, தமிழுக்கு அழைந்து வந்து பாடவைத்தது இளையராஜா தான். சித்ரா தமிழில் முதல் முதலில் பாடி பாடல் பூஜை கேத்த பூவிது பாடல் தான். அந்த பாடலைத் தொடர்ந்து இளையராஜாவின் இசையில் சித்ரா பல பாடல்களை பாடி இருக்கிறார். மேலும்,கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'சிந்து பைரவி' படத்தில் வரும் பாடறியேன் படிப்பறியேன், நானொரு சிந்து ஆகிய பாடல்களுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார்.
ஆறு தேசிய விருது, தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகளும் மற்றும் பல்வேறு மாநில விருது, இந்தியாவின் உயரிய அந்தஸ்து பெற்ற பத்ம விபூஷன் விருதையும் பெற்ற பெருமைக்குரியவர் பாடகி சித்ரா.

பாடகி சித்ரா: இவர், 1988ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், 14 வருடம் கழித்து 2002 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. நந்தனா என பெயரிடப்பட்ட குழந்தைக்கு 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்டதால், சித்ரா அந்த குழந்தையை பாசம் காட்டி வளர்த்த நிலையில் 2011ஆம் ஆண்டு, நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
குழந்தையின் ஆட்டிசம் நோய் இருப்பதால், எங்கு சென்றாலும் தன்னுடன் குழந்தையை அழைத்துச்செல்வார். அப்படி, 2011 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக , குழந்தையுடன் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சித்ராவின் மகள் நந்தனா உயிரிழந்தார். இந்த சம்பவம் சித்ராவின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் பலரும் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கபடி கூறினார்கள். ஆனால், வயது மூப்பு காரணமாக சித்ரா தத்தெடுக்க முன்வரவில்லை.

உன்னை இழந்த வலி: ஒவ்வொரு ஆண்டும் மகள் நந்தனாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில், தனது அன்பு மகளுக்காக சில குறிப்புகளை எழுதும் வழக்கம் கொண்ட பாடகி சித்ரா. மகள் நந்தனாவின் நினைவு நாளையொட்டி சித்ரா, தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உன்னை இனி என்னால் தொட முடியாது, உன் பேச்சை கேட்க முடியாது உன்னை பார்க்க முடியாது. ஆனால், நீ என் இதயத்தில் இருப்பதால், என்னை எப்போதும் உணர முடிகிறது. என் அன்பே நாம் மீண்டும் ஒரு நாள் சந்திப்போம். உன்னை இழந்த வலி அளவிட முடியாது. வானத்தில் பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீ தான் என்பதை நான் அறிவேன் படைப்பாளர்களின் உலகம் நீ நன்றாக வாழ்வாய் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











