51 காயங்களுடன் துடித்த ஒன்றரை வயது பிஞ்சு.. கேரள கொடூரத்தால் நெஞ்சு உருகிய பாடகி சித்ரா!
சென்னை: மனிதநேயமே மரணித்துப் போய்விட்டதா என்று கேட்கத் தோன்றும் அளவிற்கான ஒரு கொடூரச் சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. பெற்ற தாயும், அவளது காதலனும் சேர்ந்து ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையை சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பிரபல பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ரா, விஜய் ஆண்டனி தனது வேதனையை மிகவும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த தம்பதி அகிலா மற்றும் அகில். இவர்களுக்கு அர்ஷித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருக்கும் நிலையில், குழந்தையின் தந்தை கடந்த 2024 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த நேரத்தில் அகிலாவுக்கு அஷ்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து, அகிலா தனது குழந்தையுடன் அஷ்கரோடு ஒன்றாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மே 29-ம் தேதி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது குழந்தை திடீரென மயங்கி விழுந்திருக்கிறது.

கேரளாவில் கொடூரம்: இதையடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர். மேலும், குழந்தை சாப்பிடும்போது தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டதாக அஷ்கர் கூறியிருக்கிறார். ஆனால், குழந்தை சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டதால் சந்தேகமடைந்த மருத்துவர், காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் மருத்துவர்களுக்கே அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் தலையை சுவரிலோ அல்லது தரையிலோ அடித்தது போன்ற காயங்கள், சிகரெட் சூடு என குழந்தையின் உடலில் மொத்தம் 51 காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பெற்ற தாய் அகிலா மற்றும் அவளது காதலன் அஷ்கர் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாடசி சித்ரா வேதனை: இந்தக் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், பாடகி கே.எஸ்.சித்ரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். வெறும் ஒன்றரை வயது மட்டுமே நிரம்பிய அர்ஷித் மகன் மறைந்த செய்தி, நெஞ்சைப் பிழியும் துயரமாகும். இது மனதை நிலைகுலையச் செய்கிறது; அச்சத்தை ஏற்படுத்துகிறது. மாறட்டும் மனித சமூகம்: "இத்தகைய கொடூரமான நிகழ்வுகள் இனி ஒருபோதும் நம்மிடையே நிகழாதிருக்கட்டும்; மனித சமூகம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளட்டும்.
அமைதியாய் இளைப்பாறு தங்கமே: நடிகர் விஜய் ஆண்டனி தனது பதிவில் அமைதியாய் இளைப்பாறு, தங்கமே. இதயத்தை நொறுக்கும், கற்பனைக்கும் எட்டாத துயரம் இது. உன் இழப்பு ஆழமாக உணரப்படும். நீ என்றும் அன்புடன் நினைவுகூரப்படுவாய் எனத் தனது பதிவில் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார். அப்பாவிப் பிஞ்சு என்று கூடப் பார்க்காமல் ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பேசுபொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications