தன்னைப் பற்றியும், தன் சாதியை பற்றியும் அவதூறு பரப்பும் கும்பல்.. இசைவாணி வழக்குப்பதிவு!
சென்னை: நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த விழாவில் இசைவாணி பாடிய 'ஐ எம் சாரி ஐயப்பா' பாடல் ஐயப்ப பக்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி இணையத்தில், இசைவாணியை பலரும் கண்டித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது இசைவாணி, தன்னைப் பற்றியும், தான் சார்ந்த சாதியைப் பற்றியும் சில அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடகி இசைவாணி, ஐயப்பன் குறித்தும், அவர்கள் மேற்கொள்ளும் விரதங்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் 'ஐ எம் சாரி ஐயப்பா' என்ற பாடலை பாடி இருப்பதாக கூறி, இசைவாணி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்து கடவுளையும், வழிபாட்டு முறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் பாடிய இசைவாணி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

விஷமிகளின் வேலை: இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்து, நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் பெண்கள் சபரிமலைக்கு செல்வது குறித்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலின பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அந்த நேரத்தில் தான் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் The Casteless Collective என்கிற இசை குழு உருவானது. அப்போது தான், "ஐ எம் சாரி ஐயப்பா" என்கிற பாடல் உருவானது. அப்போது முதல் இந்த பாடல் பாடப்பட்டு வருகிறது. அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடல் இல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் பாடல் என்று விளக்கம் அளித்திருந்தார்.
மார்ஃபிங் போட்டோ: இந்நிலையில், பாடகி இசைவாணி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். அதில், கடந்த 2019ஆம் ஆண்டு 'I am sorry ayyappa' பாடல்களை பாடியதாகவும், சமூக வலைத்தளங்களில் அந்தப் பாடல் பரவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல எண்களிலிருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கிறது. மேலும், என் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளத்தில் சில விஷமிகள் பரப்பி உள்ளனர்.
4 பிரிவுகளின் கீழ் வழக்கு: ஐ எம் சாரி ஐயப்பா பாடல் வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வேண்டுமென்றே சமூகத்தில் பதட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றும் பொது அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்றும் சிலர் திட்டமிட்டு இந்த செயலை செய்து வருகின்றனர். தன்னைப் பற்றியும், தன் சாதியை பற்றியும் அவதூறு பரப்பும் அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் நான்க பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











