எக்ஸ்க்ளூசிவ்: அவர் எப்படி வளர்ந்தார்னு தெரியல.. வாழை ஆபாச படமா?.. சாரு நிவேதிதாவுக்கு பாடகர் பதிலடி
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வாழை. தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து மாரி அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். அவரே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சூழல் இப்படி இருக்க எழுத்தாளர் சாரு நிவேதிதா வாழை படம் ஒரு ஆபாச படம் என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற பாதவத்தி பாடலை பாடிய ஜெயமூர்த்தி ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து வாழை படத்தை இயக்கியிருந்தார். இதில் மாரி செல்வராஜின் ஊரை சேர்ந்த இரண்டு சிறுவர்கள், கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி என பலர் நடித்திருந்தார்கள். மாரி செல்வராஜே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். முதலில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவிருந்த வாழை திரைப்படம்; கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.

மிகப்பெரிய வரவேற்பு: படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே படத்தை பார்த்த இயக்குநர்கள் மாரி செல்வராஜையும், படத்தையும் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். அவர்கள் நெகிழ்ந்து போய் பேசியிருந்ததால் ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதே எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களும் வாழையை பார்த்து கலங்கிப்போய்விட்டார்கள். படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பதால் மாரி உச்சக்கட்ட ஹேப்பியில் இருக்கிறார்.
சாருவின் விமர்சனம்: படத்துக்கு பலரும் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தைத்தான் கொடுத்தார்கள். ஆனால் எழுத்தாளர் சாரு நிவேதிதாவோ தனது விமர்சனத்தை கடுமையாக முன்வைத்தார். முக்கியமாக வாழை படம் ஆபாச படம் என்றும்; பூங்கொடி டீச்சருக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே நடக்கும் காட்சிகள் எல்லாம் ஆபாச தொனியில் இருக்கிறது என்றும் தனது வலைதள பக்கத்தில் எழுதியிருந்தார். சாருவின் அந்த விமர்சனத்துக்கு பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
ஜெயமூர்த்தி பேட்டி: ஆனால் சாரு நிவேதிதா தனது நிலையிலிருந்து பின் வாங்கவில்லை. ஃபில்மிபீட் தமிழுக்கு அவர் அளித்த பேட்டியின்போதும் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் வாழை படத்தில் இடம்பெற்றிருந்த பாதவத்தி பாடலை பாடிய ஜெயமூர்த்தி ஃபில்மிபீட் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "பள்ளியில் படிக்கும்போதே பாடல் மீது எனக்கு ஆர்வம் வந்துவிட்டது. பள்ளி அளவிலான போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறேன். ஒருமுறை பாடல் போட்டிக்கு சென்றுவிட்டேன். வகுப்புக்கு வராததால் நான் பிச்சைதான் எடுப்பேன் என்று ஆசிரியர் திட்டியிருக்கிறார். அது எனக்கு ரொம்பவே கஷ்டமாகிவிட்டது. பிறகு பாடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன.
கர்ணனில் அறிமுகம்: மாரி செல்வராஜை கர்ணன் படத்தின்போது தெரியும். அதில் இடம்பெற்றிருந்த மஞ்சனத்தி பாடலை முதலில் நான் பாடினேன். ஆனால் அந்தப் பாடலை படத்தில் பாடுவது வயதான கேரக்டர் என்பதால். அதற்கு தகுந்த குரலை தேடுகிறோம் என்று சொல்லி எனது குரலில் பாடல் வெளியாகவில்லை. அதற்கு பிறகு வாழை பாதவத்தி பாடலை பாட மாரி செல்வராஜ் அழைத்தார். அந்தப் பாடலால் இப்போது பலருக்கும் என்னை தெரிந்திருக்கிறது.
ஆபாச படம் இல்லை: வாழை படம் பற்றிய சாரு நிவேதிதாவின் விமர்சனத்தை நானும் பார்த்தேன். அவர் ஒரு இலக்கியவாதி, படித்தவர் அவர் இப்படி சொல்லலாமா. அதுவும் அந்த கர்சீஃப் சீனை சாரு அப்படி அணுகியிருக்கக்கூடாது. அவர் எப்படி வளர்ந்தார் என்று தெரியவில்லை. கிராமத்தை பொறுத்தவரை சிறுவர்கள் எல்லாம் சேறு, மண்ணில் உழல்பவர்கள். அவர்களுக்கு அதுதான் வாசனை. எனவேதான் படத்தில் அந்த சிறுவன் டீச்சரின் கர்சீஃப்பை நுகர்ந்து பார்க்கிறார். ஏனெனில் அந்த வாசனை அவனுக்கு புதிதாக இருக்கிறது. அதை அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாழை ஒரு ஆபாச படம் எல்லாம் இல்லை. வேண்டுமென்றே பேசுகிறார்கள். டீச்சரை பார்த்து அந்த சிறுவன், நீங்கள் என் அம்மா போன்றும், அக்கா போன்றும் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறான். அதுதான் அந்தப் பாசம். அந்த இடத்திலேயே எல்லாமே உடைந்துவிட்டதே. நானும் பள்ளி படிக்கும்போது இளவரசி என்று ஒரு டீச்சர் இருந்தார். அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











