அயோத்தி ராமர் கோவில் விழா.. ராம நாமத்தை உச்சரியுங்கள்.. பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!
சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்த நிலையில், பாடகி சித்ராவும், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, வீட்டில் விளக்கேற்றி ராம மந்திரத்தை உச்சரிக்குமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
ஜனவரி 22ஆம் தேதி மிக பிரமாண்டமாக அயோத்தி ராமர் கோவில் திறப்பு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் ஆளும் மத்திய, உத்தரபிரதேச மாநில பாஜக அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள இந்த கோவிலுக்கு நாட்டின் பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார்.

கோயிலில் சிலை பிரதிஷ்டைக்குப்பின் பிரதமர் நரேந்திர மோடி, சிறப்புரையும் நிகழ்த்த உள்ளார். இதற்காக, அவருக்கு பலத்த பாதுகாப்புகளுடன் கோயில்வளாகத்தில் ஒரு மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதற்காக அந்த பகுதியில் 40 கேமராக்கள், சுமார் 300 பேர் கொண்ட டிடி குழுவினர் இதற்காக அயோத்திக்கு வர உள்ளனர்.
இந்நிலையில் பாடகி சித்ரா, அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ந் தேதி, மதியம் 12.20 மணிக்கு அனைவரும் ராம நாமத்தை உச்சரியுங்கள் ஸ்ரீ ராஜா, ஜெய ராமா, ஜெய ஜெய ராமா என்று உச்சரியுங்கள். அன்று மாலை வீடுகளில் திருகார்த்திகைக்கு விளக்கு வைப்பது போல, வீட்டில் உள்ள அனைத்து பகுதிக்கும் ஐந்து முக விளக்கேற்றுங்கள். கடவுளின் நல்லாசி பெற வேண்டும் என்று பேசி உள்ளார். பாடகி சித்ராவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நெட்சன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாடகர் சூரஜ் சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்னும் எத்தனை அடையாளங்கள் அழிக்கப்படும் என்றும், சித்ரா போன்ற எத்தனை உண்மை முகங்கள் வெளிவரும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். வரலாற்றை சௌகரியமாக மறந்து விட்டு, அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆனால், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன், ராமர் கோயில் திறப்பு விழாவின்போது ராம மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்; வீடுகளில் விளக்கேற்க வேண்டும் என சித்ரா கூறியது குற்றமா என்றும், கேரளாவில் ராம மந்திரத்தை உச்சரிப்பது குற்றம் என இருக்கிறதா? என்றும் சித்ராவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











