தொடர்ந்து ஐசியூவில் பாடகி லதா மங்கேஷ்கர்... ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம்
மும்பை : பாடகி லதா மங்கேஷ்கர் தொடர்ந்து 2 வாரங்களாக மருத்துவமனையில் உள்ளார்.
அவர் தொடர்ந்து ஐசியூவில் உள்ளதாகவும் ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்காக பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

பாடகி லதா மங்கேஷ்கர்
பாடகி லதா மங்கேஷ்கர் ஏறக்குறைய இந்திய மொழிகள் அனைத்திலும் பாடல்கள் பாடியுள்ளார். 92 வயதான அவர் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் இந்தியாவின் குரல், இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அவர் பாராட்டப்படுகிறார்.

மும்பை மருத்துவமனையில் சிகிச்சை
பல விருதுகளுக்கு சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர் தேசிய விருதுகள், பத்ம விருதுகள் என பல விருதுகளை பெற்றுள்ளார். மும்பையில் வசித்துவந்த அவர், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஐசியூவில் சிகிச்சை
அவர் அங்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவரது உடல்நிலை குறித்து அவரது உறவினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உறவினர்கள் அறிக்கை
லதா மங்கேஷ்கரின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் லதா தீதி தொடர்ந்து மும்பையில் உள்ள ப்ரிச் கேண்டி மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல்நிலையில் முன்னேற்றம்
இன்று காலை சோதனைக்காக அவரது வெண்டிலேட்டர் சப்போர்ட் எடுக்கப்பட்டதாகவும் அப்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டாக்டர் பிரதித் சம்தானி தலைமையிலான மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் லதா மங்கேஷ்கர் உள்ளதாகவும் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து பிரார்த்தனை செய்துவரும் ரசிகர்களுக்கு நன்றி என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் பிரார்த்தனை
லதா மங்கேஷ்கர் உடல்நிலை குறித்து தொடர்ந்து அவரது வலைப்பக்கங்களில் அவரது உறவினர்கள் அப்டேட் செய்து வருகின்றனர். இதையடுத்து அவரது ரசிகர்கள் அவர் உடல்நலம் தேறி விரைவில் வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











