திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய பிரபல பாடகி.. பக்தி பாடலை பாடியபடி வந்தார்!
சென்னை:1950 முதல் 1990 வரை தென்னிந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பின்னணிப் பாடகியாகத் திகழ்ந்தவர் பி சுசீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும், 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கும் பி.சுசீலா, வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கிறார். தற்போது பி.சுசீலா, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்.
க்ளாசிக் சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பி.சுசீலா. பல முன்னணி நடிகைகளுக்கும் தனது இனிமையான குரலின் மூலம் வெற்றியை கொடுத்த இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற "பால் போலவே" என்ற பாடலுக்காக முதன் முறையாக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றார். பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார் பி.சுசீலா.

முன்னணி பாடகி: தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பி.சுசீலா பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஹிட் பாடல்கள கொடுத்துள்ளார். சினிமாவில் பாடகியாக உச்சத்தில் இருந்த பி.சுசீலா பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், படமும் பெரிய வெற்றியை பெற்றுத்தந்ததால், அந்த காலத்தில் முன்னணி நடிகையான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகள் தங்களுக்கு பி.சுசீலா தான் குரல் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
முடி காணிக்கை: வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் பி.சுசீலா, தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடி காணிக்கையை செலுத்தினார். ஏழுமலையானை வழிபட்ட பின் கோவில் வளாகத்தில் இரண்டு பேரின் துணையுடன் நடக்கமுடியாமல் வந்த பி சுசீலா, நாராயண மந்திரம் என்ற பக்தி பாடலை மூச்சு இறைக்க பாடிக்கொண்டு வந்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அவரின் தீவிர ரசிகர்கள் அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











