நாங்குநேரி கொடூரம்.. எல்லா ரத்தமும் சிவப்பு தான்.. சாதியின் விளைவை சொல்லித்தரணும்..பாடகர் அறிவு!
சென்னை: சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க வகுப்பறையில் சாதியத்தின் சமூக விளைவை பாடமாக சொல்லிக் கொடுங்கள் என்று பாடகர் அறிவு தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் சாதி ரீதியிலான விரோதம் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரையையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து சகமாணவர்களே துடிதுடிக்க வெட்டி உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாடகர் அறிவு: இந்நிலையில், பாடகர் தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க, physics, chemistry, maths எல்லாத்தையும் போல, வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமாக சொல்லிக் கொடுங்க.
அடையாள கயிறுகள்: Anti-Caste மனநிலை மாணவப் பருவத்திலேயே எல்லாருக்கும் கற்பிக்கப்படணும். இடஒதுக்கீடு ஒரு இலவசம், ஆண்ட பெருமைகள், சாதி அடையாள கயிறுகள், குறியீடுகள் போன்ற தவறான புரிதல்களை அரும்பிலேயே கிள்ளி எறிவதுதான் சமகால கல்வியின் பிரதான நோக்கமாக இருக்கணும்.

எல்லா ரத்தமும் சிவப்பு தான்: சாதிய வன்கொடுமைகளில் யாருடைய ரத்தம் காலம் காலமாக சிந்திக் கிடக்கிறது என விவாதிக்காமல், எல்லா ரத்தமும் சிவப்பு என்றும், சாதியை ஓர் ஆபத்தில்லாத பண்பாட்டு வடிவம் என்றும், இருந்தும் இல்லாத ஒன்று என கடந்து போவதும் மேலும் ஆபத்தை வருவிக்கும் சக மாணவன் படிப்பதையும் சுயமுன்னேற்றம் அடைவதையும் கூட ஏற்க முடியாத மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்தாமல், தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது என்று பதிவிட்டுள்ளார்.
7 பேர் கைது : இந்த சம்பவத்தில் ஏற்கனவே 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications