என்ன இப்படி ஒரு முடிவெடுத்துட்டாப்ல.. இனி அந்தப் படங்கள்ல பாடவே மாட்டேன்.. விஜய் யேசுதாஸ் முடிவு!
கொச்சி: இனி, அந்த மொழி படங்களில் பாடப்போவதில்லை என்று பாடகர் விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். அப்பாவைப் போலவே பின்னணி பாடகராக இருக்கிறார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு இசை அமைப்பாளர் வித்யாசாகரால் பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டார் விஜய் யேசுதாஸ்.

இனிமை பாடல்கள்
பிறகு தொடர்ந்து ஏராளமான படங்களில், இனிமையான பாடல்கள் பாடி வருகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார். மலையாளத்தில் 3 முறை சிறந்த பாடகருக்கான மாநில அரசின் விருதும், 5 முறை பிலிம்பேர் விருதுகளும், நந்தி விருதும் பெற்றவர் இவர்.

நடிப்பும் பாடலும்
தனுஷின் மாரி படத்தில் வில்லனாக நடித்தார். இந்தப் படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. பின்னர் படைவீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தனசேகரன் இயக்கிய இந்தப் படத்தில் அமிர்தா ஐயர் ஹீரோயின். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார்.

பாடப் போவதில்லை
இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 'மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. அதனால் மலையாள சினிமாவில் இனி பாடப் போவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன் என விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.

அவமானப்பட்டேன்
மலையாள சினிமாவில் பலமுறை பலரிடம் அவமானப்பட்டதாகவும் இனியும் அந்த அவமானங்களைத் தாங்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தனது அப்பாவுக்கும் இந்த அவமானங்கள் நடந்திருக்கிறது என்று தெரிவித்துள்ள அவர், தமிழ், தெலுங்கு மொழிகளில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அங்குப் பாடகர்களுக்கு மரியாதை கொடுக்கின்றனர், அங்கு தொடர்ந்து பாடுவேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











