கங்குவா இசை வெளியீட்டு விழாவில் அஜித்தை புகழ்ந்த சிவா.. சூர்யாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் சூர்யா மற்றும் படக்குழுவினர், நடிகர்கள் சிவக்குமார், கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். படமானது நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கங்குவா இயக்குநர் சிவா, நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசியது பலரிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
சூர்யாவை வைத்து சிவா இயக்கியிருக்கும் படம் கங்குவா. சிறுத்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிவா வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் விவேகம், அண்ணாத்த தவிர்த்து மற்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சொல்லப்போனால் அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார் சிவா. சூழல் இப்படி இருக்க சூர்யாவை வைத்து அவர் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது.

முனைப்பில் சிவா: முக்கியமாக அவர் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் தோல்விப்படமாக அமைந்தது. மேலும் சிவாவை பலரும் ட்ரோல் செய்தனர். எனவே கங்குவா படத்தை மிகச்சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர். அதற்கான அத்தனை உழைப்பையும் அவர் போட்டிருக்கிறார். படமானது நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தச் சூழலில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
சிவா பேச்சு: விழாவில் பேசிய சிவா, " கங்குவா படத்தை இரண்டு வருடங்கள் எடுத்தோம்.. அந்த காலத்தில் சூர்யாவுடன் பழகுவதற்கான அற்புத வாய்ப்பை இறைவன் கொடுத்ததற்கு நன்றி. நூறு சதவீதம் கொடுத்திடலாம் என்று 100 தடவை சூர்யா என்னிடம் சொன்னார். நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேன். ஆனால் அதை சலிக்காமல் செய்தார். கங்குவா கதாபாத்திரம் நடிப்பதற்கு மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலம் தேவை. அதை மிகச்சிறப்பாக செய்தார் சூர்யா. சிறுத்தை சிவா என்ற அடையாளத்தை ஞானவேல் ராஜா எனக்கு கொடுத்தார். அடுத்த 15 வருடங்களுக்கு கங்குவா எனது கரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று நம்புகிறேன்.
மனைவிக்கு நன்றி: எனது அப்பா இப்போ உயிரோடு இல்லை. அவர் இருந்திருந்தால் நிறைய சந்தோஷப்பட்டிருப்பார். எனது மனைவி இதுபோன்ற விழாக்களுக்கு வரமாட்டார். சண்டை போட்டு அவரை வரவைத்தேன். கங்குவா படம் ஃபிக்ஸ் ஆன பிறகு; கண்டிப்பாக இரண்டு வருடங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கஷ்டப்படுவேன் என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் என்னையும், எனது குடும்பத்தையும் மனைவிதான் சந்தோஷமாக பார்த்துக்கொண்டார். அவருக்கு நன்றி.

அஜித்தை புகழ்ந்த சிவா: இந்தப் படம் அருமையாக இருக்கிறதாக இதுவரை பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கமர்ஷியலாக படம் பண்ணிக்கொண்டிருந்தவன் நான். அது சாதாரண விஷயம் இல்லை. ஏனெனில் மக்களுக்கு பிடித்த மாதிரி படங்கள் செய்வது சாதாரண விஷயமில்லை. இந்த மாதிரியான ஒரு படம் பண்ணலாம் என்று ஆசைப்பட்டபோது அந்த ஆசைக்கு அடித்தளம் எங்கிருந்து வந்தது என்றால் என்னுடைய நண்பர், வழிகாட்ட,ி எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக நினைக்கக்கூடிய அஜித்திடமிருந்துதான்.
இத்தனை பேரின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கும் அஜித் அவரின் நம்பிக்கையை என்னிடம் வைத்தார். சிவா நீ இருக்கக்கூடிய உயரம் இது இல்லை. உனக்கு சினிமாவில் எல்லாமே தெரியுது. நீ சிறகடித்து பறக்க வேண்டும். வானம் மொத்தம் உனக்கு என்று சொன்னார். கங்குவா திரைப்படம் அழகான முயற்சி, கடுமையான உழைப்பு. இதற்கு இறைவன் கண்டிப்பாக பலன் கொடுப்பார்" என்றார் . முன்னதாக அஜித்தை சிவா புகழ்ந்தபோது சூர்யா பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் கைகளை தட்டி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications