6 வருஷ உழைப்பு அயலான் வெற்றியா ? தோல்வியா? சினிமா பிரபலம் சொல்வது என்ன!
சென்னை: சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான அயலான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியானது. இதில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் , யோகி பாபு கருணாகரன்,பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இத்திரைப்படம் குறித்து மூத்த சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவின் விமர்சனம் வெளியாகி உள்ளது.
அதில், பொங்கல் பண்டிகையொட்டி இன்று பலத்திரைப்படங்கள் வெளியானாலும், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்திற்கும் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதில் நான் இன்று பார்த்த படம் அயலான். ஏலியன் குறித்து பல படங்கள் வந்தாலும்,இந்த படம் சற்று வித்தியாசமாக உள்ளது.

அயலான் படத்தின் கதை என்னவென்றால், வேற்றுகிரகவாசியான ஏலியன் மனிதனுக்கு எதிரான என இத்தனை ஆண்டுகளாக வந்த படங்கள் அதைத்தான் சொன்னது. ஆனால்,அயலான் திரைப்படத்தில் ஏலியன் மனிதனுக்கு நன்மையை செய்யும் ஒரு ப்ரெண்டிலியான ஏலியன் என்று ஒரு புது விஷயத்தில் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும் என்ற கொள்கை உடையவராக இருக்கிறார். இதுவே ஒரு கட்டத்தில் பிரச்சனையாக மாற, அவருடைய அம்மா அவரை சென்னைக்கு அனுப்பிவைக்கிறார்.
அயலான் படத்தின் கதை: இந்த நேரத்தில் விண்கல் ஒன்று வில்லனிடம் கிடைக்கிறது. வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு சிதறிய அதிசக்திவாய்ந்த பொருள் ஒன்று பணத்தாசை பிடித்த பெரிய தொழில் அதிபரிடம் கிடைக்கிறது. அதை வைத்துத் உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி மூலமாக மாற நினைக்கும் வில்லனிடமிருந்து அந்த சக்தி வாய்ந்த பொருளை தேடி பூமிக்கு வருகிறது ஏலியன். அது சிவகார்த்திகேயனுடன் நண்பாக பழகுகிறது. சிவகார்த்திகேயன், ஏலியன்,வில்லன் இவர்களை மையமாக வைத்து கதை நகர்கிறது. வில்லன் பூமிக்கு எதிரான ஒரு செயலை செய்யும் போது, ஏலியான் அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதுதான் படத்தின் கதை.
அயலான் படத்தின் பிளஸ்: இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் தான், இந்த படத்தை காப்பாற்றுவதே விஎஃப்எக்ஸ் தான். இதற்கு அடுத்து ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை, அடுத்து சிவகார்த்திகேயன். படத்தின் முதல் பாதியில் நகைச்சுவை,ஏலியன் பூமிக்கு வருவது,ஏலியனுக்கும் சிவகார்த்திகேயனுக்குமான நட்பு என விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளை வருதே தெரியாமல் சுவாரசியமாக செல்கிறது.
குழந்தைகளுக்கு பிடித்த கதை: 2017ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இப்போது வரும், அப்போது வரும் என பிரச்சனைகளை படம் சந்தித்து கிட்டத்தட்ட 6 வருடத்திற்கு பிறகு இன்று வெளியானது. கடைசி நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, பின் பெரும் பணத்தை கட்டித்தான் படம் இன்று வெளியானது.கடந்த சில நாட்களாக சிவகாத்திகேயன் மீது எழுந்த விமர்சனத்தால், இப்படம் ஓடுமா ஓடாதா என்ற சர்ச்சை இருந்தது அதை இந்த படம் நிவர்த்தி செய்துள்ளது. குழந்தைகள் கொண்டாடும் படமாக இப்படம் உள்ளது என்று செய்யாறு பாலு படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











