Vijay Nayan: நயன்தாரா வந்து ஊட்டுவாங்களா? விஜய் ஃபீஸ் கட்டுவாரா? திடீரென ADSP இப்படி பேச என்ன காரணம்
சிவகங்கை: நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து என்னதான் ரசிகர்கள் மத்தியில் அலாதியான கருத்துகள் இருந்தாலும், எல்லோர் மத்தியிலும் அப்படியான கருத்துகள் இருப்பது என்பது அரிதான விஷயம் தான். இப்படியான நிலையில் சினிமா பிரபலங்கள் குறித்து சிவகங்கை மாவட்ட ADSP கலை கதிரவன் தெரிவித்துள்ள கருத்து, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ADSP கலை கதிரவன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் மாணவர்களை நோக்கி சில கேள்விகளை முன்வைத்தார். அதற்கு மாணவர்கள் அளித்த பதில், அதன் பின்னர், மாணவர்களின் பதிலை மையமாகக் கொண்டு அவர் பேசியது தொடர்பான தகவல்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது, மாணவர்களை நோக்கி உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார் எனக் கேள்வி கேட்க, பெரும்பாலான மாணவ மாணவிகள் விஜய் என பதில் அளித்தார்கள். அதேபோல், பிடித்த ஹீரோயின் யார் என்ற கேள்வியையும் முன் வைத்தார். அதற்கு மாணவ மாணவிகள் தரப்பில் இருந்து பெரும்பாலானோர், நயன்தாரா என பதில் அளித்தனர். மாணவ மாணவிகளின் பதிலைக் கேட்ட ADSP கலை கதிரவன், தொடக்கத்தில் அதிர்ச்சி அடைந்தார்.

ஹீரோ - ஹீரோயின்: தொடர்ந்து பேசிய அவர், " குழந்தைகளை நல்லா வளர்த்து உள்ளீர்கள். உங்களுக்கு சாப்பாடு யார் ஊட்டுவார்கள் என கேள்வி கேட்க, அதற்கு மாணவ மாணவிகள் அம்மா என பதில் அளித்தார்கள். உடனே ADSP கலை கதிரவன், இப்போ மட்டும் அம்மா , கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நயன்தாரா!. நயன்தாரா வந்து ஊட்டுவாரா? நமது கதாநாயகியாக என்றைக்கும் அம்மாதான் இருக்க வேண்டும். அம்மாதான் ஹீரோயின் என்றால், ஹீரோ யார் என்றால் அப்பாதான். கொஞ்ச நேரத்திற்கு முன்னர் விஜய் என பதில் வந்தது. விஜய்யா வந்து ஃபீஸ் கட்டி கொண்டு இருக்கிறார்? உங்களுக்கு யார் ஃபீஸ் கட்டுகிறார்? அஜித்தா? விஜய்யா? தனுஷா? சிம்புவா? அப்பாதான் ஃபீஸ் கட்டுகிறார்.

நல்ல குழந்தை: எனக்கு எப்போதும் எனது அப்பாதான் ஹீரோ, அம்மாதான் ஹீரோயின். நான் இதைத்தான் சொல்ல வந்தேன். நாம் சரியாக சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். என்றைக்கு ஒரு குழந்தை தனது ஹீரோ என தனது அப்பாவைக் கூறுகிறதோ, அந்தக் குழந்தையை அம்மா சரியாக வளர்த்துள்ளார் என்று பொருள். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. நல்லவர் ஆவதும் கெட்டவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற சினிமா பாடலையும் மேற்கோள் காட்டினார். அவரது பேச்சு தொடர்பான தகவல்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











