Sivaji: சிவாஜி குடும்பத்தை விமர்சித்த SPB... பல்லை உடைப்பேன் என மிரட்டிய நடிகர் திலகம்!
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கடந்த 2001ம் ஆண்டு காலமானார்.
அவரது 22வது நினைவு தினமான இன்று சிவாஜி குறித்த பல சுவாரஸ்யங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சிவாஜியின் ரசிகர்களில் ஒருவரான ப்ளூ சட்டை மாறனும் தனது டிவிட்டரில் அவரது நினைவுகள் குறித்த வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.
அதில், சிவாஜியின் குடும்பத்தினரை விமர்சித்து அவரால் எச்சரிக்கை செய்யப்பட்டது குறித்து எஸ்பிபி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

SPB-ஐ மிரட்டிய சிவாஜி: இந்திய சினிமாவில் தனித்துவமான இடம்பிடித்த நடிகர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர். நடிகர் திலகம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிவாஜியின் நினைவு தினம் இன்று. 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி மறைந்த சிவாஜியின் நினைவு நாளை அவரது ரசிகர்கள் அனுசரித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சிவாஜி குறித்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் சிவாஜியின் நினைவுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் மறைந்த பாடகர் எஸ்பிபி பேசிய காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. சிவாஜியுடன் தனக்கிருந்த நெருக்கமான நட்பும் உறவும் குறித்து பேசியுள்ள எஸ்பிபி, அவருடன் நடந்த சில வேடிக்கையான சம்பவங்களையும் நினைவு கூர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
அதாவது ஒருமுறை சிவாஜியை சந்திக்க வேண்டும் என நேரம் கேட்டுள்ளார் எஸ்பிபி. அதற்கு அவரோ பிரசாந்த் ஸ்டூடியோவில் இருக்கிறேன் வந்து சேரு என எஸ்பிபிக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளார். உடனடியாக கேமரா சகிதம் அங்கு சென்ற எஸ்பிபியை, சிவாஜி கிண்டலடித்தாராம். "என்னடா உடம்பு இது... இப்படி தார் டப்பா மாதிரி இருக்குற இந்த உடம்ப தூக்கிட்டு எப்படிடா நடக்குற" என ஜாலியாக கிண்டலடித்துள்ளார்.
இதனைக் கேட்ட எஸ்பிபி, சிவாஜியையே சீண்டியுள்ளார். அதாவது "நீங்க மட்டும் என்ன ரொம்ப மெல்லிசா இருக்கீங்களோ..?" என கேட்கவும், சிவாஜி கொஞ்சம் உரத்த குரலில் "ஏய்... என்னடா பேசுற" என்றவாறு எஸ்பிபியை மிரட்டியுள்ளார். அதுக்கு பயப்படாத எஸ்பிபி, "பிரபு, ராம்குமார், அண்ணி அவங்க எல்லாரும் மட்டும் ரொம்ப ஒல்லியா இருக்காங்களா" என சிவாஜிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதனைக் கேட்ட சிவாஜி, "ஏய்... யாராவது வந்து எஸ்பிபியை கட்டிப் போடுங்கடா... அவன் பல்ல உடைக்கப் போறேன் இப்ப பாரு.." என ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே விரட்டியுள்ளார். இதனைப் பார்த்த படக்குழுவினர் எதோ சம்பவம் ஆகிவிட்டதோ என மிரள, கடைசியில் சிவாஜியும் எஸ்பிபியும் ஒன்றாக கட்டிப்பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தார்களாம். அந்தளவுக்கு எஸ்பிபிக்கு உரிமைய கொடுத்து வைத்துள்ளார் சிவாஜி.


Click it and Unblock the Notifications











