கலைத்தாயின் தலைமகன்.. அழியாப்புகழின் உச்சம்.. சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஸ்பெஷல்!
சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சிவாஜி கணேசனின் வெண்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர், நடிகைகள், அவரின் தீவிர ரசிகர்கள் #HappyBirthdaySivajiGanesan என்ற ஹாஷ்டேக்கை டிராண்டாக்கி வருகின்றனர்.

மாமேதை
அசாத்திய கலைத்திறனால், இந்த உலகை அசத்திய மாமேதை தமிழனாக பிறந்து தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த பெரும் கலைஞன், மறக்க முடியாத திரை காவியங்களில் நடித்து மக்களின் உள்ளங்களில் நிலைத்து வாழும் கலைத்தாயின் தலைமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

4வது மகன்
1928ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் சூரக்கோட்டையில் பிறந்தார் சிவாஜி. நடிப்புக்கும் கலைக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத குடும்பத்தில் சின்னையா மன்றாயருக்கும்,ராஜாமணி தம்பதிக்கும் 4வது மகனாக பிறந்தார். கர்ணன் கவசத்துடன் பிறந்தது போல சிவாஜி நடிப்பின் மீது தீராத காதலுடன் பிறந்தார்.

சிவாஜி கணேசன்
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை பார்த்து பார்த்து முறுக்கேறிய தேகத்துடன் பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் வார்த்தை உச்சரிப்பை பார்த்து புகழ்ந்த தந்தை பெரியார், அவரை சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து சிவாஜி என்ற பெயர் அவரோடு ஒட்டிக்கொண்டது

ஓடினாள்.. ஓடினாள்…
கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி. முதல் படத்திலேய நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் சிவாஜி கணேசன் பின்னி பெடல் எடுத்திருப்பார். பணத்தையெல்லாம் இழந்து ஒரு பரதேசி போல சிவாஜி கணேசன் சாலையோரம் படுத்துத் தூங்குவார். இந்த படத்தில் புகழ்பெற்ற வசனமாக ஓடினாள்.. ஓடினாள்...வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்ற வசனம் இன்றளவிலும் மக்கள் மனதில் மறக்க முடியாதவை.

பல வெற்றிப்படங்கள்
பராசக்தி படத்திற்கு பிறகு சிவாஜிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன. கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல் மனோகரா,பாசமலர், புதிய பறவை, நவராத்திரி, படித்தால் மட்டும் போதுமா, கூண்டுக்கிளி, தூக்குத்தூக்கி, ஊட்டிவரை உறவு, தில்லானா மோகனாம்பாள் என அடுத்த பல ஹிட்படங்களில் நடித்தார்.

ராஜ நடை..வீர நடை
நடிப்பிற்கு என்றே தனி இலக்கணம் வகுத்துக்கொண்டு ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு வித பாவனையை வெளிப்படுத்தி இருப்பார். வசன உச்சரிப்பிலும் சரி.. உடல் பாவனையிலும் சரி...ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடையிலும் வித்தியாசத்தை காட்டி இருப்பார் சிவாஜி. கர்ணன் படத்தில் ராஜநடை.. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வீரநடை.. திருவிளையாடல் படத்தில் நய்யாண்டி நடை என நடையிலும் நடிப்பை காட்டிய ஒப்பற்ற கலைஞன் சிவாஜி.

95வது பிறந்த தினம்
பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷண், செவாலியே விருது, தாதா சாகேப் பால்கே விருது, கலை மாமணி விருது, சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார். 275 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்த சிவாஜி கணேசன் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார். 2001ல் தனது 73 வது வயதில் காலமானார். இன்று சிவாஜியின் 95வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











