பள்ளிப் பாடத்தில் சிவாஜி: ஈபிஎஸ் அரசுக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா
சென்னை: பள்ளிப் பாடத்திட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சேர்த்ததற்காக இயக்குநர் பாரதிராஜா தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நிகர் அவர் தான். அவரை பார்த்து நடிகராக ஆசைப்பட்டவர்கள், ஆசைப்படுபவர்கள் பலர். நடிக்க வருபவர்களும் அவர் நடித்த காட்சிகளை நடித்துக் காட்டும் வழக்கம் இன்று வரை உள்ளது.

இந்நிலையில் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு கவுரவம் செய்துள்ளது. பள்ளிப் பாடத்தில் சிவாஜி கணேசனை சேர்த்துள்ளது தமிழக அரசு. இதையடுத்து இயக்குநர் இமயம் பாரதிராஜா எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
உலகின் மாபெரும் கலைஞன்; தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு; சிறந்த நடிப்புத்திறன் மூலம் 'நடிகர் திலகம்', 'நடிப்புச் சக்கரவர்த்தி' என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்ட செவாலியே சிவாஜி கணேசனைப் பற்றி, மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் கள்ளிக்காடு, தான் சந்தித்த அனுபவங்களைத் தொகுத்து 'சிதம்பர நினைவுகள்' என்ற நூலாக வெளியிட்டார்.
இந்த நூலில் மாமேதை சிவாஜி கணேசனின் நடிப்புத்திறன், கலையுலக அனுபவங்கள், பெற்ற விருதுகள் எனப் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதை, தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு புதிதாக உருவாக்கியுள்ள பாடத் திட்டத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடநூலில் சேர்த்துள்ளது.
சிவாஜி கணேசனுக்குப் புகழ் சேர்க்கும் விதமாகவும், இளம் தலைமுறை மாணவர்கள் அவருடைய கலைத்திறனை அறிந்து கொள்ளும் விதமாகவும் பாடத்திட்டத்தில் சேர்த்துச் சிறப்பித்த தமிழக அரசுக்கு, திரைத்துறையின் மூத்த கலைஞன் என்ற முறையில், கலையுலகம் சார்பாகவும், என் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











