K.S.Ravikumar - நல்ல நடிகன்டா நீ.. கே.எஸ்.ரவிக்குமாரை பாராட்டிய சிவாஜி கணேசன்
சென்னை: K.S.Ravikumar(கே.எஸ்.ரவிக்குமார்) படையப்பா படத்தின்போது கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்து நீ நல்ல நடிகன் என சிவாஜி கணேசன் வாழ்த்தியிருக்கிறார்.
விக்ரமன் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். அதன் பிறகு புது வசந்தம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படம் டீசண்ட்டான வரவேற்பை பெற்ற சூழலில் அடுத்ததாக புரியாத புதிர் படத்தை இயக்கினார். ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக அதில் ரகுவரன் பேசும் ஐ நோ வசனம் இன்றுவரை கொண்டாடப்பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.

தொடர் ஹிட்டுகள்: புரியாத புதிர் படத்துக்கு பிறகு முன்னணி இயக்குநராக மாறிவிட்டார் கே.எஸ்.ரவிக்குமார். தொடர்ந்து அவர் இயக்கிய சேரன் பாண்டியன், நாட்டாமை, பொண்டாட்டி ராஜ்ஜியம், பெரிய குடும்பம், நட்புக்காக உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. அதுமட்டுமின்றி கே.எஸ்.ரவிக்குமார் படம் என்றாலே குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய விஷயங்கள் இருக்கும் என்றும் பெயரை பெற்றுக்கொடுத்தது.
ரஜினி,கமலுக்கு ஆஸ்தான இயக்குநர்: சரத்குமார் உள்ளிட்டவர்களை இயக்கிக்கொண்டிருந்த கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை வைத்து முதல்முறையாக முத்து படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து கமல் ஹாசனை அவ்வை சண்முகி படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு ஆஸ்தான இயக்குநராக மாறினார் ரவிக்குமார். அந்தவகையில் அவர் இயக்கிய தெனாலி, படையப்பா உள்ளிட்ட படங்களும் ஹிட்டாகின.

படையப்பா ரவிக்குமார்: ரஜினியின் திரை வாழ்க்கையில் மட்டுமின்றி கே.எஸ்.ரவிக்குமாரின் திரை வாழ்க்கையிலும் முக்கியமான படம் படையப்பா. ரஜினிகாந்த் தயாரித்த அந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. இன்றுவரை அந்தப் படம் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டால் அனைவரும் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் அளவுக்கு படம் இருக்கும். ரஜினியின் ஸ்டைலும் படத்தில் அடுத்தக்கட்டத்துக்கு சென்றிருக்கும்.
பாராட்டிய சிவாஜி கணேசன்: இந்நிலையில் படையப்பா படத்தின் ஷூட்டிங்கின்போது சிவாஜி கணேசன் கே.எஸ்.ரவிக்குமாரை பாராட்டியிருக்கும் சம்பவம் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "வீட்டை மணிவண்ணன் பெயருக்கு எழுதிக்கொடுக்கும் சீன் எடுக்கும்போது சித்தாரா கையெழுத்து போட வரும்போது அழ வேண்டும் என்று சிவாஜி சாரிடம் சொன்னேன். அதற்கு உடனே அவர் அது எப்படிப்பா பையனோ, மனைவியோ கையெழுத்து போடும்போது அழாத நான் மகளுக்கு மட்டும் எப்படி அழுவேன் என கேட்டார்.

நடித்து காண்பித்த ரவிக்குமார்: அதற்கு நான் இல்லை சார் அவ பொண்ணு அதனால்தான் என்றேன். சரி நீ நடித்துக்காட்டு என்று சொல்லிவிட்டார். உடனே நான் சரி என்று சொல்லிவிட்டு, அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்து சித்தாராவை வரவைத்து நடித்து காண்பித்தேன். அப்போது அழவும் செய்தேன். அதை பார்த்த சிவாஜி சார், எப்படி உடனே அழுத என்றார். இல்லை என்னுடைய மகளாக சித்தாராவை நினைத்துக்கொண்டேன் அழுகை வந்துவிட்டது என்றேன்.
சரி என்று சென்றவர், ரஜினியிடம், அவன் நல்ல இயக்குநர் மட்டும் இல்லை நல்ல நடிகனும்கூட என பாராட்டியிருக்கிறார்" என்று கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருந்தார். அப்படி சிவாஜியிடம் பாராட்டு பெற்ற ரவிக்குமாருக்கு இன்று 65ஆவது பிறந்தநாள். அவருக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











