சிவாஜி- ஜெயலலிதா: ஜோடி முதல் சம்பந்தி வரை..!
இன்று அமரர் சிவாஜி கணேசனின் 85வது பிறந்த நாள். பெங்களூர் சிறையில் 5வது நாளைக் கழித்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சிவாஜிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சினிமா தாண்டி, குடும்ப ரீதியாக இருவருமே நெருங்கிய உறவுக்காரர்கள்.. சம்பந்திகள்!
அமரர் எம்ஜிஆருடன்தான் ஜெயலலிதா அதிகப் படங்களில் நடித்திருக்கிறார். மொத்தம் 28 படங்களில் ஜோடி.
அதே நேரம், சிவாஜி கணேசனுடனும் அவர் பல படங்கள் வெற்றிப் பட நாயகியாக வலம் வந்துள்ளார்.
சிவாஜியுடன் ஜெயலலிதா முதல் முதலாக நடித்த படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை. அதில் சிவாஜியின் மகள்களில் ஒருவராக வருவார்.

நல்ல இடம் நீ வந்த இடம்...
பின்னர் கலாட்டா கல்யாணத்தில் ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் இப்படித் தொடங்கும்... 'நல்ல இடம்.. நீ வந்த இடம்.. வர வேண்டும் காதல் மகராணி..(கவியரசர் கண்ணதாசன்)'.

வெள்ளி விழா படங்கள்
அந்தப் படத்துக்குப் பிறகு சிவாஜி - ஜெயலலிதா ஜோடிக்கும் அமோக வரவேற்பு. இருவரும் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கண்டன.
'பட்டிக்காடா பட்டணமா', 'தெய்வமகன்', 'நீதி', 'ராஜா','சவாலே சமாளி', 'எங்கிருந்தோ வந்தாள்' போன்ற படங்கள் வெற்றியில் சிகரம் தொட்டன.

சொந்தக் குரலில் டூயட்
அன்பைத் தேடி படத்தில் சிவாஜியுடனான ஒரு டூயட்டில் சொந்தக் குரலில் பாடியிருப்பார் ஜெயலலிதா (சித்திர மண்டபத்தில்...)
எம்ஜிஆருடன் தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் ஜெயலலிதா தன்னை இணைத்துக் கொண்ட பிறகு, அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

எம்ஜிஆருடன் ஊடல் வந்ததால்...
வெளிப் பார்வைக்கு இப்படிச் சொன்னாலும், தனக்கு திரையுலகில் அனைத்துமாகத் திகழ்ந்த எம்ஜிஆருடன் ஊடல் ஏற்பட்ட போதெல்லாம், அவர் சிவாஜியுடன் ஒரு படத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கலாட்டா கல்யாணத்தில் சூழலுக்குத் தேவையில்லை என்றாலும் அந்த வரிகளை கண்ணதாசன் எழுதியதும் அந்த அர்த்தத்தில்தான் என்பார்கள் அந்தக் கால சினிமா பத்திரிகையாளர்கள்.

தேடிப் போன வம்பு
அதிமுக சார்பில் முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானதும், தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் அவர் செய்த ஒரு செயல்தான் அவருக்கு இன்று ஏற்பட்டுள்ள இத்தனை சங்கடங்கள், தண்டனைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
அதுதான் வளர்ப்பு மகன் திருமணம்.

வெறுப்பின் உச்சம்
1995-ல் முப்பது வயதைத் தாண்டியிருந்த விஎன் சுதாரகனை தன் வளர்ப்பு மகனாக அறிவித்தார் ஜெயலலிதா. பல பிரச்சினைகளில் கொதிநிலையிலிருந்த தமிழக வாக்காளர்கள் வெறுப்பின் உச்சத்துக்கே போனது இந்த வளர்ப்பு மகன் விவகாரத்தில்தான் என்றால் மிகையல்ல.

சிவாஜி பேத்தி
இந்த வளர்ப்பு மகன் திருமணத்துக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. சுதாகரனின் இனத்தைச் சேர்ந்த பெண் என்று தேடுகையில், சிவாஜி குடும்பத்திலிருந்து அவரது பேத்தி சத்தியலட்சுமியைப் பேசி முடித்தனர். ஜெயலலிதா முதல்வர். அவரே தனது மகன் என ஒருவரைக் காட்டியதால், சிவாஜி கணேசன் வாயே திறக்காமல் சம்மதம் சொல்லிவிட்டார்.

ஆட்சியை இழக்க வைத்த ஆடம்பரத் திருமணம்
அதன் பிறகு அந்த வளர்ப்பு மகனுக்கு நடந்த மகா ஆடம்பரத் திருமணம், மக்களை வெறுப்பேற்ற, அடுத்த ஆண்டே ஆட்சியை இழந்தார் ஜெயலலிதா (இந்த வளர்ப்பு மகன் திருமண ஏற்பாடுகளை நேரில் பார்த்து படமெடுக்கப் போன எங்களை போலீசார் கைது செய்து உட்கார வைத்தது தனிக் கதை!)

பாவம் சிவாஜி
ஆட்சியை இழந்த ஜெயலலிதா, 1996லேயே சுதாகரன் எனது வளர்ப்பு மகன் அல்ல. அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்துவிட, நடிப்பின் சிகரமான சிவாஜி கணேசனே எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியாமல் திணறிப் போனார்!


Click it and Unblock the Notifications











