கலைஞரின் வசனத்திற்கு உயிர் கொடுத்த சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன்
சென்னை: கலைஞரின் வசனத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சிவாஜி கணேசனுக்கு முக்கிய பங்குண்டு.
தமிழ் சினிமாவிற்கு சிவாஜி கணேசன் ஆற்றிய பங்கு எனச் சொல்வதை விட சிவாஜி இல்லாமல் தமிழ் சினிமா இல்லை. என்று சொல்வது தான் சரியாக இருக்கும். சிவாஜியின் நீண்ட கால நண்பரான கருணாநிதி எழுதிய வசனங்களுக்கும் பாடல்களுக்கும் அற்புதமான நடிப்பை நல்கியவர்.
இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியின் திராவிடக் கருத்துக்களை பரப்ப சிவாஜி ஒரு கருவியாய் இருந்தார்.

கலைஞர்
சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் கலைஞரின் கைவண்ணத்தில் உருவானது. அனல் தெறிக்கும் திராவிட முற்போக்கு கருத்துக்களை சிம்மக்குரலோன் சிவாஜி பேசியிருப்பார். நீதிமன்றத்தில் சிவாஜி பேசும் ஓடினேன் ஓடினேன்... வசனம், கோவில் பூசாரியை எதிர்த்துப் பேசிவிட்டு அரிவாளால் வெட்டும் காட்சிகள் இவையெல்லாம் சிவாஜிக்கு கலைஞர் இட்ட உரமென்றால் அதை ஏற்று விருட்சமாகியவர் அவர்.

வாய்ப்பு
ஆரம்பத்தில் பராசக்தி திரைப்படத்தில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு வேறு படங்கள் இருந்த காரணத்தினால் சிவாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிவாஜி நடித்த சில காட்சிகள் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு பிடிக்காமல் கண்டிப்பாக மாற்ற வேண்டுமென சொன்னாராம். அப்போது கலைஞர் உள்ளிட்ட சிலர் எடுத்துக்கூறி மெய்யப்ப செட்டியாரை சம்மதிக்க வைத்துள்ளனர்.

நாடகக் காட்சி
ராஜா ராணி படத்தில் நாடகக் காட்சி வசனங்கள் அற்புதமாக இருக்கும். ராஜாவாக நடிக்கும் சிவாஜிகணேசன் ராணியிடம் கதை சொல்லும் காட்சி. சோழன் மகளை சேரன் மணந்தான்... சேரனுக்கு ஒரு செல்வன் பிறந்தான்... செல்வன் இந்தச் சிலையை மணந்தான்" என்பார். உன்னை நான் திருமணம் செய்துகொண்டேன் என்பதையே ஒரு கதையாக சித்தரிக்க சிவாஜி முயல்வார். அதை இடை மறித்து தெரிந்த கதை தானே இது என ராணி சொல்லும்போது, நடந்த கதையும் கூட என்பார் சிவாஜி. நடக்காத கதை ஒன்றை சொல்லுங்கள் எனக்கோரும் ராணியிடம், சுவைக்காது கண்ணே அது.... எனக்கூறி புறநானுற்றுக் கதையைச் சொல்வார். இது கலைஞரின் ஏற்றம் இறக்கம் கொண்ட வசனத்திற்கு சிவாஜி உயிரூட்டியதற்கு எடுத்துக்காட்டு.

சிவாஜியின் புகழ்
மனோகரா திரைப்படத்தில் குற்றவாளியாக ராஜசபையில் நிறுத்தப்படும் மனோகரன், தந்தையை எதிர்த்து பேசும் அனல் தெறிக்கும் வசனங்கள் சிவாஜியின் நடிப்பிற்கு பெருமை சேர்த்ததை மறுக்க முடியாது. இப்படி சிவாஜியின் சினிமா வாழ்க்கையில் அழிக்க முடியாத இடத்திற்கு சொந்தக்காரராக கலைஞர் கருணாநிதியும், அவரின் வசனங்களுக்கு உயிரூட்டும் விதமாக சிவாஜியும் வாழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











