சிவாஜியும் தமிழும்: திரைப்பட வசனங்கள் மூலம் தமிழ் மொழியை வளப்படுத்திய பிதாமகன்.
சென்னை : தமிழ் சினிமாவின் தனிப்பெரும் அடையாளமாகவும், தவமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சிவாஜியின் நினைவு நாள் இன்று.
Recommended Video
சிவாஜியின் தன்னிகரற்ற நடிப்பின் பெரும் முதலீடாக அவர் திரைப்பட வசனங்களில் தமிழை உச்சரிக்கும் அழகினைக் கூறலாம்.
சிவாஜியின் நடிப்பை உச்சிமுகர்ந்த தமிழ்ச் சமூகம், அவரது தமிழ் மொழிப் புலமையையும் அதன் வீரியத்தையும் கொண்டாட மறந்துவிட்டது.
தமிழ் சினிமா பல்லாயிரக்கணக்கான நடிகர்களை தனது அகண்ட திரையின் வழியே ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களில் பலர் மட்டுமே கலைஞர்களாக அங்கீகரிக்கப்பட்டனர், ஒருசிலர் மட்டுமே மாபெரும் கலைஞர்களாக கொண்டாடப்பட்டனர். அந்த ஒருசிலரில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜியின் பெயரை தவிக்கவே முடியாது

நவரசங்களின் கலை கூடம்
மேடை நாடகங்களின் வழியே திரையுலகில் அடியெடுத்து வைத்த சிவாஜி, ஆரம்பம் முதலே தனது அபாரமான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார். கறுப்பு வெள்ளை திரைப்படங்களிலேயே நவரசங்களையும் பேரருவியாய் கொட்டித் தீர்த்தவர், ஒவ்வொரு உணர்வுகளையும் ஓராயிரம் உள்ளடுக்குகளோடு பிரதிபலித்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மற்றவர்கள் இயல்பான நவரசங்களை மட்டுமே வெளிப்படுத்திய போது, சிவாஜி அதனை பன்மடங்காக்கி பிரமிக்க வைத்தார்.

தமிழ் செய்த பாக்கியம்
மொழியால் கலைகள் வளர்ந்ததை விட, கலைகளால் மொழி வீரியம் பெற்றது என்பதே உண்மை. மக்களிடம் மொழியின் அழகியலை அசல் வடிவில் கொண்டு சேர்ப்பவர்களில் முதன்மையானவர்கள் கலைஞர்கள் தான். இதனை இயல்பாகவே உள்வாங்கிக் கொண்ட சிவாஜி, தான் பேசும் வசனங்களில் தமிழ் மொழியை அதன் தூய வடிவில் உச்சரித்தார்.

இலக்கியத் தமிழும் உரைநடை தமிழும்
மேடை நாடகங்களில் பயின்ற இலக்கியத் தமிழ், உரைநடை தமிழ், காவியத் தமிழ் போன்றவைகளை சிவாஜி உச்சரிக்கும் போது, அதைக் கேட்பவர்கள் அனைவரும் கம்பனின் மனநிலைக்கு சென்றுவிடுவர். கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட தமிழ் மொழி போல், சிவாஜியின் நாவில் இருந்து தாண்டவமாடும் தமிழ் மொழி ஓவியங்களின் அழகியலுக்கு நிகரானவை.

வட்டார வழக்கு மொழிகளின் நாயகன்
காலமாற்றத்தின் வேகத்தில் தமிழ் சினிமாவின் நிறமும் கறுப்பு வெள்ளையில் இருந்து, பல பரிணாம வளர்ச்சிப் பெற்றது. அதில் குறிப்பிடத்தக்கது கதையின் தேவைக்கேற்ப வட்டார வழக்கு மொழிகள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியது. அதிலும் சிவாஜி தன்னை மேதை என நிரூபித்தார், அதன் ஒருசோற்றுப் பதமாக 'முதல் மரியாதை' படத்தை இங்கே குறிப்பிடலாம். இப்படத்தில் வரும் "அட கிறுக்குப் பய புள்ள" என்ற வசனத்தை சிவாஜி உச்சரித்ததில் இருந்து இதனை அறியலாம்.

தமிழ் மொழியின் அசல் மண்வாசனை
கிராமத்துப் பின்னணியில் சிவாஜி நடித்த படங்களில் மரபுத் தமிழை அவர் கையாண்ட விதங்களும், அப்போது அவர் வெளிப்படுத்திய முக பாவனைகளும் அடடே ரகம். இதன் ஒட்டுமொத்த சான்றாக கமலுடன் சிவாஜி இணைந்து நடித்த 'தேவர் மகன்' படத்தைக் கூறலாம். "வெதை நான் போட்டது" என்ற சிவாஜியின் இந்த வசனத்தில் இருக்கும் ஆன்மா, தமிழ் சினிமாவிற்கான பெரும் படையல் எனலாம்.

தமிழும் நானே பாவமும் நானே
சிவாஜியின் தமிழ் மொழிப் பற்று அவரது திரைப்பட வசனங்களில் மிடுக்கிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வீர தமிழ் பேசி தெறிக்க விட்டவர், இன்னும் பல பொக்கிஷங்களையும் அவரது படங்களின் மூலம் ரசிகர்களுக்கு அருளியுள்ளார். தமிழை தனது அடிவயிற்றில் இருந்து வார்த்தெடுக்கும் சிவாஜி, அதன் தேவையுணர்ந்து உணர்ச்சிகளையும் ஒருங்கே விருந்து படைத்தார். அது காலத்துக்கும் நீடித்து நிற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











