சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கிய முதல்வர்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட சினிமா கலைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது விழா நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

கலைமாமணி விருதுகள்
2019-2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை, தலைமை செயலகத்தில் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. நடிகர் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, தேவதர்ஷினி, மதுமிதா சரோஜா தேவி, செளகார் ஜானகி, நடிகர் ராமராஜன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ஐசரி கணேஷ், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ரவிமரியா, ஜாகுவார் தங்கம், இசையமைப்பாளர் இமான், தினா, பாடகர்கள் சுஜாதா, அனந்து உள்ளிட்ட 130 கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

கலைமாமணி சிவகார்த்திகேயன்
சென்னை, தலைமை செயலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கலைமாமணி விருது விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைகளால் விருது வாங்கிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கால்களில் விழுந்து
கலைமாமணி விருது சான்றிதழை அம்மாவிடம் கொடுத்து விட்டு அப்பாவின் போட்டோ இருக்கும் இடத்தில் அம்மாவின் காலில் விழுந்து இருவரது ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கலைமாமணி விருது மெடலை தனது தாயின் கழுத்தில் போட்டு அழகு பார்த்தார்.

விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழக முதல்வரிடம் கலைமாமணி விருது பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த விருதுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் கலைமாமணி விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷை வாழ்த்தி வருகின்றனர்.

இருவரும் ஒன்றாக
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருது கிடைத்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். கனா, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில், கலைமாமணி விருது பெற்ற பின்னர் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.

கலைமாமணி கெளதம் மேனன்
இயக்குநர் கெளதம் மேனனுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலைமாமணி விருதை வழங்கி கெளரவித்தார். விருது பெற்ற அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டும் சமூக இடைவெளியை கடைபிடித்த வண்ணமும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பகிரப்பட்டு வருகின்றன.

காமெடி நடிகர்கள்
தமிழ் சினிமாவில் மனோரமா, கோவை சரளாவுக்கு பிறகு பெண் காமெடி நடிகைகள் ஆதிக்கம் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், ஜாங்கிரி மதுமிதா ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் நகைச்சுவையில் கலக்கி வரும் நிலையில், அவருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











