Dhanush Fans: பாக்ஸ் ஆபிஸில் தனுஷை ஓரம் கட்டிய S.K.. பொறுமையில் கெத்து காட்டும் தனுஷ் ரசிகர்கள்!
சென்னை: தமிழ் சினிமா முழுவதும் இப்போது ஒரே பேச்சாக இருப்பது நேற்று அதாவது 2024ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் ஆன படங்கள் குறித்துதான். மொத்தம் நான்கு படங்கள் ரிலீஸுக்கு முன்னரே கவனம் ஈர்த்திருந்தாலும், அமரன், ப்ளடி பெக்கர் மற்று பிரதர் ஆகிய படங்கள் நேரடித் தமிழ்ப் படங்களாக ரிலீஸ் ஆனது. இதுமட்டும் இல்லாமல், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் ரிலீஸ் ஆனது. லக்கி பாஸ்கர் படம் நேரடித் தெலுங்கு படம். இதில் அமரன், ப்ளடி பெக்கர் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டினைப் பெற்றுவருகின்றது. அதேநேரத்தில் ஜெயம் ரவியின் பிரதர் படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. அமரன் படம் பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூல் செய்து வருவதால், சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நடவடிக்கையும் அதற்கு தனுஷ் ரசிகர்களின் ரியாக்ஷனும் கொடுத்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் மோதல் இருக்கின்றதோ இல்லையோ இவர்களின் ரசிகர்களுக்கும் இடையில் சரியான மோதல் இருந்து கொண்டே உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவை அனைத்தும் இன்றுவரை கிசுகிசுக்களாகவே உள்ளது. நடிகர் தனுஷோ அல்லது சிவகார்த்திகேயனோ நேரடியாக இருவரின் பெயரைக் குறிப்பிட்டு எதுவுமே கூறவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் தங்களின் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பேசுகின்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மோதலை மறைமுகமான கொம்பு சீவிவிடுவதைப்போல் உள்ளது என்ற பேச்சும் உள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு கூட, தனுஷின் 49வது படமான கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் 21வது படமான அயலான் ஆகியவை ரிலீஸ் ஆனது. இவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்ற பேச்சு எழுந்த பின்னர் இருவரது படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது இதுவே முதல்முறை. இப்படியான நிலையில் இருவரது படங்களும் வசூலில் சொதப்பவில்லை. மாறாக இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும்.
அமரன்: இந்தப் படங்களுக்குப் பிறகு தனுஷின் 50வது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்தார். இந்தப் படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. ராயன் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபீஸில் இந்திய அளவில் முதல் நாளில் ரூபாய் 21 கோடிகளை வசூல் செய்துள்ளது எனவும், உலக அளவில் ரூபாய் 28 கோடிகளை வசூல் செய்துள்ளது எனவும் பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வசூல்: இது தனுஷின் ராயன் படத்தின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வருகின்றனர். மேலும் தனுஷ் ரசிகர்களையும் சீண்டி வருகின்றனர். கோட், வேட்டையன் படத்திற்குப் பின்னர் இந்த ஆண்டு வெளியான படங்களில் அமரன் படம் மூன்றாவது இடத்தினை எளிதில் பிடிக்கும் என்ற பேச்சு சினிமாத்துறையில் கிளம்பியுள்ளது. இந்தப் பேச்சு கொக்கரிக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் கால்களில் சலங்கை கட்டியதைப்போல் துள்ளிக்குதித்து வருகின்றனர்.
பதிலடி: இதில் சில ரசிகர்கள் தனுஷ் ரசிகர்களை சீண்டும் பணியிலும் வழக்கம்போல் களமிறங்கியுள்ளனர். இப்படியான ரசிகர்களின் நடவடிக்கையைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளனர் என்றுதான் கூறவேண்டும். அதாவது, லப்பர் பந்து படத்தில் கெத்து கதாபாத்திரம் தனது விக்கெட்டினை இழந்த பின்னர், எதிர் அணி வீரர்கள் துள்ளிக் குதிப்பதை பார்த்து சந்தோஷப்படும். அதனைப்போல் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் அதேநேரத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களைப் பார்க்கும்போது சிரிப்பாகவும் இருப்பதாக தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் குபேரன் படம் இந்த வசூலை எல்லாம் அசால்ட்டாக கிராஸ் செய்துவிடும் எனவும் கூறிவருகின்றனர்.



Click it and Unblock the Notifications











