ரூ 4 கோடி சம்பள பாக்கி.. ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சமரசம்!
சென்னை : ரூ 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், அயலான், மாவீரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த மாவீரன் படம் தெலுங்கில் மஹாவீருடு என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மிஸ்டர் லோக்கல்
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக தெரிகிறது. 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு வந்த போது இரு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்தி கொள்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிடப்பட்டது.

சமரசம்
இந்த வழக்கு இன்று ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம் ஆஜராகி இரு தரப்பும் சமரசம் ஏற்படுத்தியது தொடர்பான மனுவை அளித்தார். இதனை தொடர்ந்து சம்பள பாக்கி தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையிலான வழக்கு சமரசம் அடைந்துள்ளது.

கமலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தினை அடுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார், இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தை ராஜ் கமலுடன் இணைந்து சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











