சென்னை மெட்ரோவில், சிவகார்த்திகேயன் "இன்ட்ரோ சாங்"... 2 கோடி செலவில்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தின் அறிமுகப் பாடலை ரூ. 2 கோடி செலவில் மெட்ரோ ரயிலில் வைத்து படம் பிடிக்கப் போகிறார்களாம்.
ரஜினிமுருகன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2ம் தேதி தொடங்கவிருக்கிறது. ரஜினிமுருகன் இன்னும் வெளிவராத நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் 2 வது முறையாக இந்தப் படத்தில் சிவாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் அறிமுகப் பாடலை சுமார் 2 கோடி செலவில் மெட்ரோ ரெயிலில் படம்பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிவகார்த்திகேயன் - பாக்யராஜ் கண்ணன்
ரஜினிமுருகன் படம் பிரச்சினைகளால் வெளிவராமல் இருக்கிறது, இதனால் சற்று சோர்ந்து போன சிவகார்த்திகேயன் பொறுத்துப்பார்த்து விட்டு தனது அடுத்த படவேலைகளை தொடங்கி விட்டார். சுந்தர்.சி மற்றும் அட்லீ இருவரிடமும் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் இவர் கதாநாயகனாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ், சிவகார்த்தியுடன் கைகோர்த்து இருக்கிறார்.

பிரமாண்ட கூட்டணி
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படவிருக்கும் இப்படத்தில் முதன்முறையாக பிரமாண்ட கூட்டணியுடன் கைகோர்த்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். பி.சி.ஸ்ரீராம்(ஒளிப்பதிவாளர்), கமலக்கண்ணன்(விஎப்எக்ஸ்), ராஜு சுந்தரம் (நடனம்), அனிருத் ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற விருக்கின்றனர்.

போட்டோ ஷூட்
சமீபத்தில் இப்படத்திற்கான போட்டோ ஷூட் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பிற்கு செல்லும் முன்னர் மீண்டும் ஒரு போட்டோ ஷூட்டை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பை பெரும்பாலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் படம்பிடிக்கவிருப்பதால், அதற்கு ஏற்றவாறு போட்டோ ஷூட்டை நடத்தவிருக்கின்றனர்.

அறிமுகப் பாடல்
இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அறிமுகப் பாடலை சென்னை மெட்ரோ ரெயிலில் படம்பிடிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இந்தப் பாடல் படத்தின் முக்கியப் பாடல் என்பதால் சுமார் 2 கோடி செலவில் இப்பாடலை படம்பிடிக்க இருக்கின்றனராம். ராஜு சுந்தரம் நடனம் அமைக்கும் இப்பாடலில் வெளிநாட்டு நடனக் கலைஞர்களுடன் சிவகார்த்திகேயன் இணைந்து நடனம் ஆடவிருக்கிறாராம்.

அடுத்த ஆண்டு
மொத்தப் படப்பிடிப்பையும் 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். மொத்த படப்பிடிப்பும் முடிந்த பின்னர் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மொத்தம் 3 விதமான தோற்றங்களில் நடிக்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











