Madharaasi: மதராஸியாக மாஸை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் சிவகார்த்திகேயன்.. எல்லாம் கைகூடுமா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம் வரும் 5 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தனது பிஸ்னஸை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அதாவது சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பது தெரிந்ததே. ஆனால் அவரது உழைப்பும் வளர்ச்சியும் என்பது பலருக்கும் உத்வேகம். சிவகார்த்திகேயனைப் போல மற்றவர்களும் வளர வேண்டும் என்பதற்கு சிவகார்த்திகேயனின் வெற்றியும் இருப்பும் ரொம்பவும் முக்கியமானதாக உள்ளது. 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது முதல் படத்தில் இருந்து கடைசியாக வெளியான அமரன் படம் வரை பல படங்கள் பிரமாண்டமான வெற்றியைக் கொடுத்துள்ளது. சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. சில படங்கள் மொத்தமாகவே சறுக்கி விட்டுள்ளது.

அமரனின் தாக்கம்: இப்படி இருக்கும்போது கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் வணிக ரீதியாக எட்டிய இமாலய வெற்றி என்பது சிவகார்த்திகேயனை டயர் 2 நடிகர்களுக்கும் டயர் 1 நடிகர்களுக்கும் இடையிலான அந்தஸ்தை எட்ட வைத்தது. இந்நிலையில் அமரன் படத்திற்கு பின்னர் அவரது நடிப்பில் உருவாகி ரிலீஸ் ஆக உள்ள படம் மதராஸி. இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டிலும் திரைத்துறையில் இருப்பவர்கள் செலுத்தும் கவனம் என்பது மிகவும் முக்கியமானது. காரணம் முந்தைய படமான அமரனில் சிவகார்த்திகேயன் வசூலித்தது ரூபாய் 350 கோடிகளுக்கு மேல் என்று கூறப்படுகிறது.
நிர்ப்பந்தம்: அப்படி இருக்கும்போது இவரது அடுத்த படமான மதராஸி ரூபாய் 350 கோடிகளை வசூல் ரீதியாக எட்டவில்லை என்றாலும், ரூபாய் 300 கோடிகளையாவது வசூலிக்குமா என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் யோசித்து வருகிறார்களாம். தெலுங்கில் காதி படத்தை தவிர பெரிய படங்கள் என்று பெரிதாக ரிலீஸ் ஆகவில்லை. இப்படி இருக்கும்போது மதராஸி படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு படம் சரியான முறையில் கிளிக் ஆக வேண்டும்.

நம்பிக்கை: கடைசியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வி படமாக மாறியது. இப்படி இருக்கையில் இந்த படத்தின் மூலம் ஏ.ஆர். முருகதாஸ் கம் பேக் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அமரன் படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயனின் சம்பளம் அதிகரித்துவிட்டது என்பது பரவலான பேச்சாக இருந்தாலும், அதை தக்க வைத்துக் கொள்ள இந்த படம் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புக்கிங் சுமாராகத்தான் சென்று கொண்டுள்ளது. படம் வெளியான பின்னர் விமர்சனங்கள் படத்தின் வசூலுக்கு கைகொடுக்க வேண்டும் எனவும் நம்பிக் கொண்டு உள்ளது படக்குழு. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அதுவும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படம் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இதுவும் படத்தின் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் படத்தின் வெற்றி மீது சிவகார்த்திகேயன் மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. படம் வெல்ல வாழ்த்துகள் எஸ்.கே.


Click it and Unblock the Notifications











