ராவண பூமியில் பராசக்தி படப்பிடிப்பு... மதுரை மண்ணு, மனக்கும் மல்லி... சுதா கொங்காரா கொடுத்த அப்டேட்!
சென்னை: சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோர் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதற்கட்டபடிப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும், 2ஆம் கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி பெறுமா மதராஸி: அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமரன் படம் வெளியாகும் நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். அப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. அதன் பின்னர், அப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு மதராஸி என பெயர் வைக்கப்பட்டது. மேலும், இப்படத்தில் வட இந்தியர்கள் தமிழகர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை தான் படமாக எடுத்துள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் SK: சூரரை போற்று படத்திற்கு பிறகு சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, சிம்பு இருவரில் ஒருவர் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதற்கான கதையை சுதா எழுதி வந்தார். மேலும் சூர்யா கங்குவா, ரெட்ரோ, வாடிவாசல் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தார். இதனிடையே, யாரும் எதிர்பாராத நேரத்தில் சுதா கொங்காரா இயக்கத்தில் SK நடிப்பது உறுதியானது. அவரது சினிமா கரியரில் மிக முக்கியமான படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
பிரியாணி விருந்து: பீரியட் படமாக பராசக்தி உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வந்தது. பிள்ளையார்பட்டியில் சிவகார்த்திகேயன், அதர்வா, சுதா ஆகியோர் சாமி தரிசனம் செய்யும் புகைப்படம் வெளியானது. சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு பி.டி.எஸ் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டிருந்தது படக்குழு. அதுமட்டுமல்ல, படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயனின பிறந்தநாளையும் படக்குழுவினர் கொண்டாடினர்.பிறகு படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்தும் வைத்திருந்தார். அதுதொடர்பான வீடியோவை இயக்குநர் சுதா கொங்காரா பதிவிட்டிருந்தார்.
படப்பிடிப்பு நிறைவு: பராசக்தி படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். சென்னை, சிதம்பரம், காரைக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக சுதா கொங்காரா தெரிவித்துள்ளார். மேலும், மீனாட்சி, மயில் மல்லி; முதற்கட்ட படப்பிடிப்பு இந்த பூமியில் எனக்கு விருப்பமான மதுரையில் முடிவடைந்தது என சுதா கொங்காரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை பயணம்: இலங்கையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதால் விரைவில் அங்கு செல்லவுள்ளோம் என ரவிமோகன் தெரிவித்தார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அவருக்கு இது 100வது படமாகும். சிவகார்த்திகேயன் இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பராசக்தி படத்திற்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











