பராசக்தி ரவுடி படமா? கழுவி ஊத்துவதாக இருந்தாலும் ஒரு அறம் வேண்டாமா? விமர்சகர்கள் கவனத்திற்கு!
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் பராசக்தி. படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் கடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு, படத்திற்கு தவறான அதே நேரத்தில், மோசமான விமர்சனங்களை பரப்பினர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே எழுந்தது. பராசக்தி படத்தின் இயக்குநரும் கூட அதை உறுதிப்படுத்தினார். சமூக வலைதளங்களில் முகம் தெரியாத, கும்பல் மனப்பான்மையில் இருக்கும் ரசிகர்கள் தொடங்கி சமூக வலைதள வாசிகள் ஒரு படத்தை காலி செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு காழ்ப்புணர்வு இருக்கிறது என்றோ, வேறு காரணங்கள் இருக்கிறது என்றோ வைத்துக் கொண்டாலும், அது ஆரோக்கியமற்றது.

ரவுடி படமா?: ஆனால் சில விமர்சகர்கள் பராசக்தி படத்திற்கு விமர்சனங்களை தெரிவித்தது அதிர்ச்சி அளிக்கும் வகையில் தான் இருந்தது. அதாவது ஒரு விமர்சகர் படத்தை ஒரு ரவுடி படம் என்று அழுத்தமாக விமர்சிக்கிறார். ஆனால் அவரது இந்த வாதத்திற்கோ, விமர்சனத்திற்கோ படத்தில் ஒரு காட்சி கூட கிடையாது என்றே கூறலாம். இந்தி திணிப்பு எதிர்ப்பு என்று அண்ணன் ரயிலுக்கு தீ வைக்கிறான், தம்பி இந்தி பிரச்சார சபாவுக்கு தீ வைக்கிறான். இது மட்டும் இல்லாமல், தம்பியைக் கொன்ற வில்லனை அண்ணன் பழிவாங்குவது போல, கொல்கிறான் என்று தெரிவித்தார்.
திரைக்கதை: ஆனால் படத்தின் திரைக்கதையை தனது விமர்சனத்திற்கு ஏற்றவகையில் திரித்துக் கூறி உள்ளாரே தவிர, படத்தில் தம்பியைக் கொன்ற வில்லனைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கம், கதாநாயகனான, செழியன் கதாபாத்திரத்திற்கு இல்லவே இல்லை. வில்லனின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்ததும், செழியன் உடனே தனது சகாக்களுடன் டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் முறையிடுவது போன்ற காட்சி தான் உள்ளது. ஒரு இடத்தில் கூட தம்பியைக் கொன்ற வில்லனை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலான காட்சியோ, வசனமோ இல்லை. அப்படி இருந்தும் படத்தை ரவுடி படம் என்று விமர்சித்தது என்பது சமூக வலைதளங்களில் தனது அபிமான நடிகரின் படம் ரிலீஸ் ஆகும்போது மற்றொரு நடிகரின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதை மோசமாக விமர்சிக்கும் சமூக வலைதள வாசிகளுக்கும் இந்த விமர்சகர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்த்துகிறது.

எது பிரச்னை: பராசக்தி படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. மாணவர்கள் போராட்டத்தை இன்னும் தீவிரமாக காட்டி இருக்கலாம். காதல் காட்சிகளையும் அதற்கான பாடல் காட்சிகளுக்கும் கொடுத்த கால அவகாசத்தை இந்தி திணிப்பு எதிர்ப்புக்கான அவசியத்தை பற்றிய காட்சிகளை மேலும் கூர்மை ஆக்கி இருக்கலாம். அரசியல் தலைவர்களான அண்ணா, கலைஞர், அன்னை சத்தியவாணி முத்து, பேராசிரியர், பக்தவச்சலம், இந்திரா காந்தி, நேரு உள்ளிட்டோரை படத்தின் காட்சிகளில் கொண்டு வந்த இயக்குநர், அதே காலகட்டத்தில் இருந்த பெரியார் மற்றும் காமராசரையும் அவர்களின் கருத்துக்களையும் படத்தின் காட்சிகளில் கூறி இருந்தால் படம் இன்னும் நிறைவான படமாக இருந்திருக்கும்.


Click it and Unblock the Notifications











